Friday, April 22, 2011

பஞ்ச பூதங்கள் சொல்லும் பாடம்

இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. அதாவது ஐந்து ஆதார சக்திகளால் ஆனது. அது நமக்குத் தெரியும்.

வாழ்க்கையில் வெற்றியடைய விரும்புகிறவர்களுக்கு இந்த பஞ்ச பூதங்களும் சில பாடங்களை, சில ரகசியத் தத்துவங்களைச் சொல்கின்றனவே, அது தெரியுமா?

1. நிலம்

தங்கம், தாதுப்பொருட்கள், பெட்ரோல் என்று பலப்பல வளங்களைத் தன்னுள் வைத்திருக்கிறது நிலம். அந்த வளங்களை, அந்த மூலப் பொருள்களை எடுத்துத்தான் மனிதன் இன்று ஆயிரக்கணக்கான அற்புதப் பொருட்களைப் படைத்துப் படைத்து தனது வாழ்க்கையைச் சுகமாகவும் சொகுசாகவும் அமைத்துக் கொண்டிருக்கிறான்.

மனிதனிடமும் பல்வேறு வகையான திறமைகள் பதுங்கிக் கிடக்கின்றன. ஒரு திறமைகூட இல்லாத மனிதன் உலகில் யாராவது உண்டா?

ஆனால், எத்தனையோ திறமைகளைத் தன்னுள் வைத்திருக்கிற மனிதன், அதில் எத்தனை திறமைகளை வெளிக்கொண்டு வந்தான்? அவற்றால் எத்தனை பலன்களை அடைந்தான்? இதுதான் கேள்வி.

இன்னொரு விஷயம். கார் நிற்கும், ரயில் நிற்கும். பூமி எப்போதாவது நின்றிருக்கிறதா? நின்றால் என்ன ஆகும்?

இயக்கம்தான் பூமியின் இலக்கணம். இயக்கம்தான் மனிதனின் ஆக்கத்திற்கும் அடிப்படை. உழைப்பு, உழைப்பு, ஓயாத உழைப்பு. இதுவே மனித வளர்ச்சிக்கான ஏணி.

நம்மிடம் திறமை இருக்கிறது. வெளியே கொண்டுவர வேண்டும். இடைவிடாத இயக்கமே அளவிலாத ஆக்கம் தரும்.
இவையே நிலம் நமக்குச் சொல்லும் பாடங்கள்.

2. வானம்

வானத்திற்கு எல்லையுண்டா? அதுபோல் மனிதனின் கனவுகளும் லட்சியங்களும் வானம்போல் எல்லையற்று விரிந்து இருக்க வேண்டும். கனவுகளும் லட்சியங்களும் எந்த அளவுக்கு உயர்வாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு நமது முயற்சிகளின் தீவிரமும் அதிகமாக இருக்கும். முயற்சிகளின் தீவிரத்தைப் பொருத்தே வெற்றிகள். வெற்றிகளைப் பொருத்தே வளங்கள்; செழிப்பு; மகிழ்ச்சி.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு

பாதங்கள் மண்ணில் பதிந்திருந்தாலும், பார்வை வானத்தில் இருக்கட்டும்.

இது, வானம் நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடம்.

3. நீர்

மேட்டிலிருந்து பள்ளம் நோக்கிப் பாயும் தன்மை உடையது நீர்.
மேகத்தின் சுமை நீர்த்துளிகள். அதை மழையாகக் கீழே விடுகிறது. ஆற்றின் சுமை வெள்ளம். பள்ளங்களைத் தேடிப் பயணம் செய்து கடைசியில் கடலில் கொண்டு போய்த் தள்ளிவிடுகிறது.

மனிதனும் தனக்குச் சுமையாக உள்ள கெட்ட பழக்கவழக்கங்கள், அழிவுச் சிந்தனைகள், சோம்பல், பயம், தாழ்வு மனப்பான்மை, கவலை போன்ற ஆக்கத்திற்காகாத அத்தனையையும் கீழே இறக்கி வைத்தால் தான் வாழ்க்கை வளம் பெறுகிறது.

ஆக்கத்திற்கு உதவாத எண்ணங்களை, செயல்களை, பழக்க வழக்கங்களை, நபர்களை விட்டுவிடு.

நீர் நமக்குச் சொல்லும் பாடம் இதுதான்.

4. நெருப்பு

ஒரு சின்ன தீப்பொறி போதும். காடே எரிந்து சாம்பலாவதற்கு.
ஒரு சின்ன வெறி, வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும்; வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற லட்சிய வெறி போதும், ஒரு மனிதனின் தலையெழுத்தை மாற்ற; அவனது தலை முறையையே தலைநிமிர்ந்து வாழ வைக்க. ஒரு தீக்குச்சியை, ஒரு தீப்பந்தத்தை கீழ்நோக்கிப் பிடித்தாலும் தீயின் ஜ்வாலை மேல் நோக்கித்தான் இருக்கும்.

இது என்ன சொல்கிறது மனிதனுக்கு?

நமது எண்ணங்களும் செயல்பாடுகளும், மேல்நோக்கித்தான் இருக்க வேண்டும். அதாவது, மேன்மைகளை நோக்கித்தான், வளர்ச்சிகளை நோக்கித்தான், முன்னேற்றங்களை நோக்கித்தான், உயர்வை நோக்கித்தான் இருக்க வேண்டும்.

இந்த இரண்டும் நெருப்பு நமக்குச் சொல்லும் பாடங்கள் அல்லவா?

5. காற்று

இந்த உலகில் காற்று இல்லாத இடம் எது?

நம்மைச் சுற்றிலும் கண்ணுக்குத் தெரியாத ஒரு கவசமாக காற்று இருக்கிறது.

இதைப்போலத்தான் நம்மைச் சுற்றி ஒரு கவசமாக, பாதுகாப்பாக, வழித்துணையாக தன்னம்பிக்கை இருக்க வேண்டும். தன்னம்பிக்கை சற்றே அகன்றாலும் விரக்தியும், ஏக்கமும், சலிப்பும், அலுப்பும் நம்மைச் சூழ்ந்து நெருக்கிவிடும். சுருக்கிவிடும். விடலாமா அப்படி?

காற்று அவ்வப்போது மாசுபடுவதைப் போல, தன்னம்பிக்கையும் அவ்வப்போது மாசுபடும். அதாவது தளரும்; மறையும். அப்போதெல்லாம் தன்னம்பிக்கை நூல்களைப் படித்தும், உரைகளைக் கேட்டும் அதை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

லட்சக்கணக்கான பணம் கொடுத்து வாங்கிய அயல்நாட்டுக்கார் என்றாலும் இரண்டு ரூபாய் டிப்ஸ் கொடுத்து சக்கரங்களில் காற்றை நிரப்பவில்லை என்றால் வண்டி ஓடுமா? ஓடஓடக் குறையும் காற்றையும், மீண்டும் நிரப்பிக் கொள்ளத்தானே வேண்டும்.

உள்சென்று வெளியே வரும் மூச்சுக் காற்றுக்கு எப்போது முற்றுப்புள்ளி விழுகிறதோ, அப்போதே வாழ்க்கையும் முடிகிறது.
வாழ்வதற்கு மூச்சு முக்கியம். வளர்வதற்கு முயற்சி முக்கியம். முயற்சி நின்றால் வளர்ச்சி நிற்கும்.

ஆக, காற்றைப் போல, தன்னம்பிக்கை நமக்குக் கவசமாக இருக்க வேண்டும். மூச்சுக்காற்றைப் போல முயற்சிகள், தொடர்ந்து நடைபெறவேண்டும்.

காற்று நமக்கு கற்பிக்கும் பாடங்கள் இவை. பஞ்ச பூதங்கள் சொல்லும் இத்தனை செய்திகளையும் கொண்டு வாழ்க்கையை வளமாக்கி மனதில் பசுமையாகப் பதித்துக் கொண்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வோமே.

Sunday, April 17, 2011

அடிமுடி தேடிய புராணம்: ஒரு விளக்கம்

 

thiruchivapuram-e1

திருமாலும் பிரமனும் சிவத்தின் அடியையும் முடியையும் தேடி அவமானமடைந்த கதையை முதலில் திருஞானசம்பந்தர் திருமுறைகளில்தான் காண்கின்றோம். திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருப்பதிகம் ‘தோடுடைய செவியன்’ எனத் தொடங்குவது. அதன் ஒன்பதாவது பாடலில் இக்கதையைக் கூறுகிறார். அதனைக் குறித்து விளக்குவதற்கு முன் வாசகர்களை வேறு ஒரு பதிகத்திற்கு அழைத்துச் செல்லுகின்றேன்.

கும்பகோணத்திற்கு அருகில் திருச்சிவபுரம் என்றொரு தலம் உள்ளது. கடத்தற்காரர்களின் தயவில் அத்தலத்திலிருந்த நடராஜர் மேலைநாட்டுக்கு ஒரு ‘விசிட்’ போய் வந்ததிலிருந்து இந்தத் தலம் தமிழர் அனைவரும் அறிந்ததொன்றாகி விட்டது. இந்தத் தலத்துத் திருப்பதிகத்தின் முதலிரண்டு திருப்பதிகங்களின் பின்னிரண்டு வரிகளை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றேன்.

முதல் பாடலின் பின்னிரண்டு வரி:

“பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழுநில னினில் நிலைபெறுவரே”

இதன் பொருள்: உயிர்கள் தத்தமது வினைக்கீடாக எய்த வேண்டிய எண்ணற்ற பிறவிகளாகிய படைப்புத் தொழிலைச் செய்ய வேண்டும் என்னு சங்கற்பத்துடன் தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனாகிய கோலங் கொண்ட சிவபெருமானது சிவபுரத்தைத் தியானிப்பதாகிய அகப்பூசை புரிபவர்கள் வீட்டுலகத்தில் என்றும் சங்கும் ‘சாயுச்சிய’ நிலையை அடைவார்கள்.

அடுத்த பாடல்:

“அலைகடல் நடுஅறி துயிலமர் வியன்பர னுறைபதி
சிலைமலி மதில்சிவ புரநினை பவர்திரு மகளொடு திகழ்வரே.”

இதன்பொருள்: உயிர்கள் வாழும் உலகங்கள் உரிய கால எல்லை வரையும் அவை அழியாமல் நிலைபெறும் வண்ணம் அவற்றைக் காக்கும் தொழிலைப்புரியும் திருவுள்ளமொடு திருப்பாற்கடலின் நடுவிலே யோக நித்திரை மேவியுள்ள திருமாலின் உருவம் தாங்கிக் காத்தல் புரியும் இயல்பினைக் கொண்ட சிவபெருமானது மலைகள் போன்ற மதில்களால் சூழப்பட்ட திருச்சிவபுரத்தைத் தியானம் செய்வதாகிய அகப்பூசை செய்பவர்கள் முத்தித் திருவாகிய வீட்டின்பத்தை எய்தி இன்புறுவார்கள்.

மூன்றாவது பாடல்:

“முழுவதும் அழிவகை நினைவொடு முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர் புகழ்மிகும் உலகிலே”

இதன்பொருள்: உலகம் முற்றிலும் மாயையில் ஒடுங்கவேண்டும் என்ற சங்கற்பத்துடன் உலகங்கள் அனைத்தும் தோன்றுவதற்குக் காரணமாக நின்ற முதல்வனான இறைவனே அச்சங்கற்பம் செயலாவதற்குப் பொருத்தமான உருத்திரன் வடிவங் கொள்ளும் சிவபெருமான் கோயில் கொண்டுள்ள தலமாகிய செழுமையான சிவபுரநகரத்தைத் தொழுமவர் புகழ் பூவுலகிலே மேலும் மிகுதியாகும்.

எனவே, முழுமுதற் கடவுளான சிவமே நான்முகனாகப் படைத்தலையும் திருமாலாக காத்தலையும் உருத்திரனாக ஒடுக்குதலையும் செய்கின்றார் என்பதனைத் திருஞானசம்பந்தர் இம்மூன்று திருப்பாடல்கள் வழியே உணர்த்துகின்றார். எனவே சிவன் ஒருவனே இம்முத்தொழில்களை இம் மூன்று வடிவங்களைத் தாங்கிச் செய்கின்றான் என்பது பெறப்படும். இந்த உண்மையை ஏனைய திருமுறைகளும் கூறும்.

எடுத்துக் காட்டாகக் கருவூர்த் தேவர், திருவிசைப்பா என்னும் ஒன்பதாம் திருமுறையில்,

“சுருதிவா னவனாம் திருநெடு மாலாம்
……… படர்சடை முக்கட்
பகவனாம் அகவுயிர்க் கமுதாம்
எருதுவா கனனாம் எயில்கள் மூன்றெரித்த
ஏறுசே வகனுமாம்”

எனப் பாடுவதை காண்க.

சிவன் தானே இம்முச்செயல்களையும் செய்யும் நிலை சம்பு பட்சம் எனப்படும். சம்- இன்பம்; பு – உண்டாக்குபவன். சம்பு என்பது இன்பம் உண்டாக்குபவன் என்ற பொருளில் சிவனுக்கு உரிய பெயர்களில் ஒன்றாம். இதுவே சங்கரன் எனவும் வழங்கும். ‘இன்பஞ் செய்தலின் சங்கரன்’ எனக் காஞ்சிப் புராணம் கூறும். சம் – இன்பம்; கரன் – செய்பவன்.

சிவமாகிய இறைவன் பக்குவப்பட்ட ஆன்மாக்களை அதிட்டித்து இம்முத்தொழில்களையும் தன் ஆணை வழியே நடத்தும் அதிகாரத்தை அளிக்கின்றான். இவ்வாறு இறைவனால் அதிட்டிக்கப்பெற்ற ஆன்மாக்கள் அணுபட்சம் எனப்படுவர். அணு என்பது ஆன்மாவைக் குறிக்கும். இறைவன் ஆணை வழி நடக்கும் ஆன்மாக்களாகிய இவர்களுக்கும் பிரமன், திருமால், உருத்திரன் என்ற பெயர் உண்டு. இவர்களை மணிவாசகர் ‘சேட்டைத் தேவர்’ என்னும் பெயரால் குறிப்பிடுவார்.

அணுபட்சத்தில் உள்ள ஆன்மாக்களாகிய அயனும் அரியும் பிற தேவர்களும் பிறப்பிறப்பிற்பட்டு உழல்பவர் என்றும் சிவன் ஒருவனே பிறப்பிறப்பில்ல முழுமுதல் என்றும் திருமுறைகள் கூறும்.

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்;
ஆறு கோடி நாராயண ரங்ஙனே;
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்;
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே” (அப்பர்)

சம்புபட்சம், அணுபட்சம் பற்றிய விரிவான செய்திகளை சிவஞானபோதம் – இரண்டாம் சூத்திரத்து மாபாடியத்தில் காணலாம்.

சம்புபட்சத்தின்படி சிவனே பிரமன், சிவனே திருமால், சிவனே உருத்திரன். சிவனே பிரமனாகத் தன் முடியையும் திருமாலாகத் தன் அடியையும் தேடினான் என்பது அபத்தம்.

பின் சிவனின் அடிமுடி தேடிய பிரமனும் திருமாலும் யாரெனில் அந்த உயர் நிலையடைந்த ஆன்மாக்களே ஆவர். அணுபட்சத்தினராகிய அவர்கள் அசுத்த மாயையின் ஆட்சிக்கு உட்பட்டனவே. அந்த மாயையின் மயக்கினால் அறிவு மயங்கிக் குற்றமிழைத்துத் தண்டமும் பெறுவர். அந்தக் கதைகளை நாம் புராணங்களில் காண்கிறோம். கடும் முயற்சிக்குப் பின் பெரிய பதவியை அடைந்து பதவிச் சுகத்தால் பெருந்தவறு இழைப்பவர்களை உலகியலிலும் காண்கிறோம்..

sankaranarayanar

திருஞானசம்பந்தர் தம்முடைய திருப்பதிகங்களில் ஒவ்வொரு ஒன்பதாம் பாடலிலும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு முதலும் ஈறும் இல்லாத சிவபரம்பொருளின் அடிமுடிகளைக் காண முற்பட்டுப் பங்கப்பட்டவர்களாகக் கூறப்பட்டவர்கள் பிரமன் திருமால் பதவியில் இருந்த ஆன்மாக்களே.

எப்படி சக்தி வழிபாடும், முருகவழிபாடும், விநாயக வழிபாடும் சிவவழிபாடோ அப்படியே திருமால் வழிபாடும் சிவவழிபாடே. சைவதத்துவ அடிப்படையில் அந்த மூன்றையும் தனித்தனியே பிரிந்து போகாமல் சைவம் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. திருமாலைத் தனியாகப் பிரித்துக் கொண்டு போனவர்களைத் தடுக்க முடியவில்லை.

ஆனால் திருமால் வழிபாடு சிவவழிபாட்டில் ஓரங்கமாகவே இன்றும் இருந்து வருகின்றது. சிவனை விட்டுப் பிரியாத, குணகுணி சம்பந்தமுடைய அவனுடைய திருவருளே சிவசத்தி எனப் பெண்பாலாகப் பேசப்படுகின்றது. அந்தத் திருவருளே ஆண்வடிவில் திருமாலாகச் சைவம் கொள்ளுகின்றது. எனவே, பழைமையான சிவன் திருக்கோவில்களில் அம்பிகையின் சந்நிதிக்கருகில் திருமால் சந்நிதி கட்டாயம் இருக்கும்.

சைவம் போற்றும் சப்தகுருமார்களில் (குருக்கள் எழுவர்) தலைமைக் குருவாகத் திருமால் வழிபடப்படுகின்றார்.

“திருமால் இந்திரன் பிரமன் உபமனியன்
தபனன் நந்தி செவ்வேளாதி
தருமமுது குரவருக்குந் தனதருளால்
ஆசிரியத் தலைமை நல்கி
வருமெவர்க்கும் முதற்குருவாய் மெய்ஞ்ஞான
முத்திரைக்கைம் மலரும் வாய்ந்த
உருவழகும் குறுநகையும் காட்டியருள்
தருஞ்சிவனை உளத்தில் வைப்பாம்”
- சிவதத்துவ விவேகம், பாயிரம்.

சிவதத்துவ விவேகம் அப்பைய தீட்சிதர் அவர்களால் இயற்றப்பட்ட நூல். இது திராவிட மாபாடிய கர்த்தர் மாதவச் சிவஞானயோகிகளால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. நாராயணன் முதலிய திருமாலின் நாமங்கள் சிவனுக்கு உரியனவேயாதலால் சைவர்கள் அந்தப் பெயர்களைச் சூட்டிக் கொள்வது இன்றும் உண்டு.

விஷ்ணுவுக்குச் சைவசமயம் எத்தகைய இடத்தைத் தந்துள்ளது எனத் தெளிவிக்க மற்றொரு சான்று. இது சைவ சாத்திரமான பரிபூரணானந்த போதம் கூறுவது.

”சைவத்து அச்சுதனை உயிரெனச்
சாற்றினுந் தாவில்
மெய்வத்து ஆயசிவ சத்தியின்
மேனி இஃது என்றும்
தொய்யற் றூயசிவ பேதமுள்
ஒன்று என்றும் சொலலால்
பொய்வத்து அன்றுஇது என்றுஉரன்
கோடலும் பொருந்தும்”

இதன்பொருள்: சைவநூல்களில் விட்டுணுவைப் பசு (ஆன்மா) என்று கூறினாலும், அழிவற்ற உண்மைப் பொருளாகிய சிவசத்தியின் உருவம் இது என்றும், ஆனந்த சுத்தசிவத்தின் ஒன்பது பேத வடிவங்களில் ஒன்று என்றும் கூறப்படும் சம்பிரதாயம் உண்டு. ஆதலால் விட்டுணு கற்பித தெய்வமன்று.

“சம்பு மார்க்கம் ஏய்ப்பவே
சனார்த்தனன் நெறிக்கணும்
அம்பரத்தை மேவு ஞான
வான்களோடுய் அன்பரும்
உம்பர் வாழ்த்த வேயு ளாரென்று
ஓது நூலுணர்ந் துளோர்
வம்பு பேசிடார்மெய்ஞ் ஞான
வாழ்விற் பேத மில்லையே”

இதன்பொருள்:சைவமதத்திலே ஞானாகாசத்தை அடந்துள்ள ஞானவான்களோடு, பத்தி மார்க்கம் பற்றி வாழும் அடியரும் தேவர்களும் வாழ்த்தும்படி உள்ளமை போல, வைணவத்திலும் அத்திறமுள்ளவர்கள் உள்ளார் என்று உரைக்கும் நூல்களை அறிந்தோர் குதர்க்க வாதத்தில் தலையிடார். ஞானத்தாலாகும் முத்தி வாழ்க்கையில் பேதமில்லை.

இந்தச் சான்றுகளால் திருமாலைச் சிவசத்தியின் ஒருவடிவமாகப் போற்றுகின்றதென்பதும் ஞானமார்க்கத்தைக் கைக்கொண்டு ஒழுகும் வைணவரும் சைவம் கூறும் முத்தியை அடைவர் என்றும் ஞானத்தாலாகும் முத்தியில் சைவ வைணவ பேதமில்லை என்பதும் சைவத்தின் கொள்கை என்பது தெளிவாகும்.

எனவே இந்தக் கதை சமயச் சண்டையைத் தூண்டும் என்பது அறியாமை.

இதற்கு முன்பு வந்த ஒரு கட்டுரைக்கான ஒரு மறுமொழியில் குறிப்பிடப் பட்ட புத்தூரார் கூறியது பற்றிக் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. மற்றொரு மறுமொழியில் போற்றுதற்குரிய சுவாமி சித்பவானந்தா அவர்கள் கூற்றாக இவ்வாறு குறிப்பிடப் பட்டது - “தற்பெருமை பூண்டிருந்த திருமாலும், படைப்புத் தெய்வமும் பரமனுடைய அருளுக்குப் பாத்திரமாகாது என்றென்றும் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்னும் கருத்தையும் திருவாசகத்தில் அவர் அடுத்தடுத்து சில இடங்களில் இயம்பியுள்ளார். தத்துவத்துக்கு ஒவ்வாத இக்கருத்து சமயப் பிணக்கை வளர்க்கும்; சான்றோர்க்கு இது ஏற்புடையதாகாது.” இவ்வாறு கூறியது சரியல்ல. சுவாமி சித்பவாநந்தா அவர்களால் இந்து மதத்திற்குப் பொதுவான பல நன்மைகள் விளைந்தன என்பது உண்மையே. ஆனால் அவர் திருமுறைகளையும் சைவசித்தாந்த சாத்திரங்களையும் முறையாகப் பயின்றவர் அல்லர். தத்துவ விளக்கத்திற்கே இந்தக் கதை கூறப்பட்டது. இதனால் மாணிக்கவாசகரின் உள்ளத்தை அவர் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகின்றது.

முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி

உள்ளத்தே உள்ளதே உண்மை

bhagavan-ramana-and-children

பகவான் ரமணர் அடிக்கடி கூறுவதுபோல், இவ்வுலகில் எதற்காவது நிரூபணம் தேவை இல்லை என்றால் அது “நான் இருக்கின்றேனா?” என்ற ஒரே ஒரு கேள்விக்குத்தான். அதை யாரும் கேட்பதில்லை என்பது வேறு விஷயம். எவருக்கும் எந்த விஷயத்திலும் சந்தேகம் என்றால் உடனே அதற்கு நிரூபணம் கேட்பார்கள். தான் இருப்பதை யாரும் சந்தேகப்படாததால் அந்தக் கேள்வியும் எழுவதில்லை. கேள்வி எழாதது மட்டும் அல்ல, அப்படி யாராவது கேட்டாலும் அவர்களை ‘இது என்ன பைத்தியக்காரன் போல கேட்கிறானே?” என்று கூட சந்தேகமாகப் பார்ப்பார்கள். அதாவது தான் இருப்பதில் யாருக்கும் எள்ளளவு கூட சந்தேகம் கிடையாது. ஆனாலும் “நான் யார்?” என்ற கேள்வி நல்ல மன நிலையில் இருப்பவர்கள் எவர் கேட்டாலும், அது அவர் தம் வாழ்வின் அர்த்தங்களையும், நோக்கங்களையும் புரிந்து கொள்ள உதவும். அப்படி ஒருவன் கேள்வி கேட்பது அவனது மனமும் புத்தியும் இயங்கும் சாதாரண மன நிலையில் தான். அதற்கு பதிலும் அந்த நிலையிலேயே வருவதைவிட, அதனினும் சூட்சமமான அனுபவ நிலையில் வருவது விசேஷமானது தான். அது ஏன் என்பதைத்தான் இக்கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

“நான் யார்?” என்ற கேள்வியைக் கேட்கும் முன், நாம் என்ன நிலையில் இருந்துகொண்டு கேட்கிறோம் என்று பார்க்க வேண்டும். நம் தினசரி அனுபவங்களை மட்டும் கருத்தில் கொண்டு வேறு எந்த விதமான யூகங்களும் இல்லாது நம் நிலையை அலசிப் பார்ப்போம். நாம் உலகில் உள்ள எதையுமே நமது ஐம்புலன்களின் உதவியால்தான் அறிகிறோம். அதன்பின் நமது ஆறாவது அறிவையும் கொண்டு அவைகளை அலசிப் பார்த்து சில பல எண்ணங்களையும் உணர்வுகளையும் வளர்த்துக் கொள்கிறோம்; அவைகளை மனதளவிலும் நிறுத்திக் கொள்கிறோம். இப்படியாகச் செய்து உலகில் உள்ள அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுகிறோம். இந்தக் கட்டுரையைப் படிக்கும் போதும், அவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறதல்லவா? அப்படி இல்லையென்றால் மனது ஒரு பக்கமும் பார்வை ஒரு பக்கமும் இருக்கிறது என்று தானே அர்த்தம்? அப்படி மனது குவிந்திருந்தாலும் சிதறியிருந்தாலும் அது நம் விழிப்பு நிலையில் தான் நடந்து கொண்டிருக்கிறது.

இது நமக்கு உணர்த்துவது என்ன? நாம் விழித்திருக்கும்போதும் நினைவிருக்கும்போதும், உலகத்தைக் காண்கிறோம்; உலகத்தில் உள்ளவைகளுடன் விதவிதமான அனுபவங்கள் அடைகிறோம். அப்படியாக நமது வாழ்க்கை அனுபவங்கள் ஒரு தொடர் நிகழ்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால், என் உலகத்தில் நீங்கள் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நான் இல்லை. நான் பார்ப்பவனாக, அனுபவிப்பவனாக மட்டும் தான் இருக்கிறேன். அதே போல் உங்கள் உலகத்தில் நான் உண்டு, மற்றவைகள் உண்டு, ஆனால் நீங்கள் இல்லை. அதாவது ஒவ்வொருவரும் தம் தம் உலகத்தை சிருஷ்டித்துக் கொள்கின்றனர். காணும் தன்னை விட்டு உலகம் என்று தனியாக எதுவும் கிடையாது. தனது எண்ணங்களுக்கும், ஆசை அபிலாஷைகளுக்கும் ஏற்ப ஒவ்வொருவரும் உலகத்தில் நடந்து கொள்கின்றனர். பொதுவாக மற்றவர்களும் அப்படியே நடக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். முடியாத போது மற்றவர்களிடம் அனுசரித்துப் போகின்றனர். ஆக இவை அனைத்தும் சம்பந்தப்பட்டவர்கள் விழித்துக் கொண்டிருக்கும் போது நடக்கின்றது என்பதைத் தவிர இதில் வேறு ஏதும் ஒற்றுமை கிடையாது. நம் விழிப்பு நிலை (ஜாக்ரத்) தவிர வேறு நிலைகளும் நம் அனுபவத்தில் உண்டு. அவை என்ன?

விழிப்பு நிலையிலேயே நம்மால் எப்போதும் இருக்க முடிகிறது என்றால், நம் அனுபவங்கள் அனைத்தையும் உண்மை என்று கொள்ளலாம். அப்படி இல்லையே! நம்மால் ஒரு நாளோ இரண்டு நாளோ விழித்திருக்க முடியும் என்று வைத்துக்கொள்வோம். அப்புறம் கண்ணயர்ந்து தூங்கப் போய்விடுவோம் அல்லவா? அப்போது நமக்கு எங்கே உலகம் தெரிகிறது? ஏன் நம்மைப் பற்றியே அப்போது நமக்கு உணர்வு இல்லையே. தூக்க நிலையிலிருந்து விழித்தபின் தன்னை உணர்கிறோம், அப்புறம்தானே உலகத்தையும் உணர்கிறோம்? அதாவது தானும் உலகும் ஒன்றாகத் தான் உதிக்கிறது; விழித்திருக்கும்போது தான் உலகம் தெரிகிறது, ஆனாலும் அந்த நிலையில் நம்மால் தொடர்ந்து இருக்க முடியாது. உலகமே தெரியாத ஆழ்தூக்க நிலைக்கு (ஸுஷுப்தி) நாம் தினம் தினம் சென்றால் தான் உலகம் பற்றிய அனுபவங்களைப் பெறமுடிகிறது. அப்படி இருந்தும் நமது விழிப்பு நிலை அனுபவங்களுக்கே நாம் மிகுந்த முக்கியம் கொடுக்கிறோம். இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் நமது தனித்தனி உலகத்தை சிருஷ்டித்துக் கொள்கிறோம் ; அது மட்டுமன்றி அவ்வுலகம் எப்போதும் உள்ளதாகவும் நினைத்துக் கொள்கிறோம். உண்மை என்றால் அது எப்போதும் உள்ளதாக இருக்க வேண்டும் அல்லவா? ‘இப்போது உள்ளது, அப்புறம் இல்லாதது’ என்ற தன்மை கொண்ட உலகத்தையும் அதன் அனுபவங்களையும் உண்மை என்று எப்படிக் கொள்ள முடியும்?

சிலர் ‘இல்லையே நீ தூங்கும்போதும் உலகம் இருக்கிறதே’ என்று சொல்வார்கள். உண்மையில் அது தூங்கும் எனக்கு இல்லை, வேறு யார் விழித்துக்கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் இருக்கிறது. ஆனாலும் தூக்கத்தில் நாம் இல்லாது போய்விட்டோமா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்லுவோம். ஏனென்றால் நமக்கு தூக்கத்திலும் ஒரு அனுபவம் இருப்பதால் தான், விழித்ததும் ‘நன்கு தூங்கினோம்’ என்று சொல்கிறோம். அப்போது நம்மை நாம் உணர்வதில்லை, உலகம் இருப்பதையும் அறிவதில்லை, ஆனாலும் ஆழ்ந்த தூக்கத்தில் அனுபவம் உண்டு என்றால் நாம் இருக்கிறோம் என்றுதானே அர்த்தம்? அது மட்டுமல்ல; அப்படி நன்கு தூங்கிய பின் நமக்கு ஒரு ஆனந்த மயமான உணர்ச்சி வருகிறதல்லவா? அந்த உணர்ச்சியை நாம் விழித்திருக்கும் போதும் அனுபவிக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் அல்லவா? இதை நாம் இவ்விரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட கனவு நிலை (ஸ்வப்னம்) மூலம் மேலும் அறிந்து கொள்ளலாம்.

lady-dreams

விழிப்பு, ஆழ்நிலைத் தூக்கம் தவிர மூன்றாவதாக நமக்கு கனவு நிலையும் ஒரு அனுபவமே. ஆனால் அப்போது நடப்பதை நாம் மட்டுமே அறிவோம். இது மற்ற இரு நிலைகளின் கதம்பம் என்று கூடச் சொல்லலாம். விழிப்பு நிலை போன்ற அனுபவங்களும் இங்கு உண்டு; தூக்க நிலை போன்று அதன் இறுதியில் ஒன்றும் நிலையாத தன்மையும் இங்கு உண்டு. கனவு நிலை அனுபவங்களின் உண்மைத் தன்மைதான் என்ன? கனவு முடிந்ததும் ஏதும் இல்லை என்றாலும், கனவு காணும் போது அது முடியும் வரை அவை அனைத்துமே உண்மை என்றுதான் உணர்வோம். அங்கும் உணர்வதற்கு ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் கனவு முடிந்தபின் விழிப்பு நிலையில் தான் அதன் விவரங்களைக் கூற முடியும். அனுபவம் ஒரு நிலையிலும், அதைப் பற்றிய விளக்கம் வேறு நிலையிலும் என்பது தான் கனவிற்கும் தூக்கத்திற்கும் உள்ள ஒற்றுமை. விழிப்பு நிலையில் நாம் இருப்பது போலவே கனவு நிலையில் நம்மைப் போன்று ஒருவரையும், உலகம் ஒன்றையும் உருவகப்படுத்தி நாம் கனவை அனுபவிக்கிறோம். கனவு காணும் போது அது நாம் உருவகப்படுத்தியது தான் என்பதை நாம் விழிக்கும் வரை உணரமுடியாது. ஆனாலும் அனுபவங்கள் உண்டு. இல்லையென்றால் விழித்தபின் அவைகளைச் சொல்லமுடியாதே. ஆக இவைகள் அனைத்திலிருந்தும் நமக்குத் தெரிவது என்ன?

1. கனவு நிலையிலும், தூக்க நிலையிலும் அனுபவிப்பவன்(ள்) என்று ஒருவன்(ள்) இருக்கிறான்(ள்) அல்லது ஒன்று இருக்கிறது.
2. தூக்க நிலையில் ஒரு அமைதியும் ஆனந்தமும் கிடைக்கிறது.
3. விழிப்பு நிலையில் உள்ளது போலவே வரும் கனவு நிலை அனுபவங்கள் நிரந்தரமற்றவை; உண்மையல்ல.
4. நிரந்தரமாயிருக்கும் ஆனந்தத்தைத் தேடும் ஒருவன் விழிப்பு நிலை அனுபவங்கள் எதனின்றும் தூக்கத்தில் கூட கிடைக்கும் அந்த ஆனந்த நிலையை இன்னமும் அடையவில்லை.

நாம் தினம் தினம் அனுபவிக்கும் இந்த மூன்று நிலைகளுக்கும் மேலே நாலாவது நிலை (துரீயம்) ஒன்று உள்ளது என்றும், அதுதான் இம்மூன்று நிலைகளுக்கும் ஆதாரமாக உள்ளது என்றும் முற்றும் உணர்ந்த ஞானிகள் கூறுகின்றனர். அதை உணர்ந்தால் நாம் பிறந்த பயனை அடைந்து, வாழ்க்கையின் இரகசியத்தையும் அறிவோம் என்றும் கூறுகின்றனர். அப்போது கனவு அனுபவங்கள் எப்படி உண்மையில்லை என்று விழித்தபின் உணர்கிறோமோ, அதே போன்று நனவு அனுபவங்களும் உண்மையானது அல்ல என்று அந்த முதிர்ந்த நிலையில் உணர்வோம்.

இந்த அளவு வரையில் நாம் நமது அனுபவங்களை புத்தி பூர்வமாக அலசி ஆராய முடியும். இதற்கும் மேலே சென்று நாம் தூக்கத்தில் அடையும் “என்றும் உள்ள அந்த ஆனந்த” நிலையை நமது பயிற்சி (Abhyasa) சாதனைகள் (Sadhanas) மூலமும், சாதுக்கள் சகவாசம் மூலமும் அடைய முயற்சி செய்யவேண்டும். அப்போது என்றும் ஆனந்தமாய் உள்ள பரமார்த்திக பெருநிலையை அடைவோம். இப்போது நாம் அமைதியாக இருக்கும்போதும், ஆழ்ந்த தூக்கத்திலும் அடையும் அந்த இன்பமே அது என்றும், அது நிரந்தரமாக நம்மில் உள்ளது என்றும் உணர்வோம். அதை நம்மிடம் இருந்து மறைத்து வைக்கும் நமது பழைய எண்ணங்களும், செயல்பாடுகளும் விலகுவதற்கே நாம் எண்ணிலாப் பிறவி எடுக்கிறோம். அதை உணர்ந்து நாம் உலகத்தில் செயல்பட, அவைகள் ஒன்றன்பின் ஒன்றாக விலக, என்றும் உள்ளது தவிர வேறு உண்மை எதுவும் இல்லை என்பது நமது அனுபவத்தில் இப்பிறவியிலேயே வரும். அதற்கு என்றும் எங்கும் உள்ள அந்த உண்மைப் பொருளே அருள் கொடுக்கும்.

அதை இப்போதே ஏன் கொடுக்கவில்லை என்கிறீர்களா? அப்படிக் “கேட்பது யார்?” என்ற கேள்வியுடன் உங்கள் பயிற்சியைத் தொடங்குங்கள்!

அடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை

“யார் பெரியவர்? நானா நீயா?” என்ற வாக்கு வாதம் ஒருமுறை ஆக்கும் கடவுளான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்குமே வந்ததாக ஸ்ரீ அருணாச்சல புராணம் கூறுகிறது. ஆருத்ரா தரிசனம் மற்றும் மஹா சிவராத்திரி நாட்களுக்கு இடையே நடந்த அந்த வாதமே அருணகிரி எனப்படும் திருவண்ணாமலை உருவானதற்குக் காரணமாக அப்புராணம் கூறுகிறது. தெய்வீகத்தன்மை நிறைந்த அந்நிகழ்ச்சி, வேறு பல விஷயங்களையும் உணர்த்துவதாக நான் நினைக்கிறேன். அதை விளக்கும் ஒரு முயற்சியே இக்கட்டுரை. (ஸ்ரீமகாவிஷ்ணு முழுமுதல் பரம்பொருளின் வடிவமே என்பதில் நமக்கு எந்த பிணக்கும் இல்லை. இந்தப் புராணக் கதைக்காக, விஷ்ணு என்பது காக்கும் தொழில் கொண்ட கடவுளைக் குறிப்பதாக வைத்துக் கொள்வோம். புராணக் கதைகளின் மையமான நோக்கம் தத்துவங்களை விளக்குதல் தானே அன்றி, தெய்வ வடிவங்கள் பற்றிய பூசலை உண்டாக்குவதல்ல என்பதையும் மனதில் கொள்வோம்).

lingodbhavaபலருக்கும் அந்நிகழ்ச்சி தெரிந்திருக்கலாம். எனினும் அதை இங்கே சுருக்கமாகக் காணலாம். தான் ஆக்குவதனாலேதான் காப்பதற்கு உயிர்கள் இருப்பதால் ‘தானே பெரியவன்’ என்று பிரம்மாவும், தான் காப்பதினால்தானே எவரும் உயிரோடிருப்பதால் ‘தானே பெரியவன்’ என்று விஷ்ணுவும் வாதித்துக் கொண்டிருந்தனர். இந்த வாதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அவர்களின் தொழிலை நம்பி இருந்த அனைவரும் பாதிக்கப்பட்டனர். வாதம் ஒரு முடிவுக்கும் வராது முற்றிக்கொண்டு இருந்ததால், முழு முதற் கடவுளாகிய பரமசிவன் அவர்கள் முன் ஆகாயத்திற்கும் பூமிக்கும் பரவியிருக்கும் ஒரு அக்னிப் பிழம்பாகத் தோன்றினார். அசரீரியாக ‘எவர் முதலாவதாக தனது அடியையோ முடியையோ காண்கிறாரோ, அவரே பெரியவர்’ என்று கூறுகிறார். அவர்களிருவரும் தங்கள் தங்கள் பெருமையிலேயே மூழ்கியிருந்ததால், தம் முன் வந்தவர் யார் என்று கூட அறிய இயலவில்லை. உடனே விஷ்ணு ஒரு வராஹ உருவம் எடுத்துக்கொண்டு பூமியைத் துளைத்துக்கொண்டு அடியைக் காணவும், பிரம்மன் ஓர் அன்ன வடிவம் எடுத்துக்கொண்டு மேலே பறந்து சென்று முடியைக் காணவும் சென்றனர்.

சிறிது காலம் சென்ற பின் அடியைக் காண இயலாத விஷ்ணு சற்று சோர்வடைந்ததும், அசரீரியாக வந்திருப்பவர் பெரியவர் என்பதை உணர்ந்தார். மேலே பறந்து சென்ற பிரம்மாவோ, மேலேயிருந்து விழுந்து கொண்டிருந்த தாழம்பூ ஒன்றைப் பார்த்து, ‘அங்கிருந்து நீ வருவதால், நான் முடியைப் பார்த்துவிட்டதாக சாட்சி சொல்ல வா’ என்று அழைத்துக் கொண்டு அவரிடம் சென்று அவ்வாறே கூறினார். உண்மை நிலையை உணர்ந்ததற்காக விஷ்ணுவை ‘எல்லா இடங்களிலும் விஷ்ணுவிற்குக் கோவில்கள் இருக்கும்’ என வந்தவர் வாழ்த்தினார். பொய் சொன்ன பிரம்மாவிற்கு கோவில்கள் எங்கும் இருக்காதென்றும், பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு ஆகாதென்றும் சாபமிட்டார்.

ஆருத்ரா தரிசனத்தன்று அந்த நீள் நெடுஞ்சுடர் தோன்றியது என்றும், அதன் தாபம் தாங்காது விஷ்ணு முதற்கொண்டு அனைத்து தேவர்களும் வேண்டிக்கொண்டதால் அதுவே மலை உருவாகத் திருவண்ணாமலை ஆனது என்றும் புராணம் கூறுகிறது. இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில் தான், ஒவ்வொரு சிவன் கோவிலிலும், சிவனுக்குப் பின்புறம் பிரகாரத்தில் லிங்கோத்பவர் சிலை உள்ளது. அதற்கு மஹா சிவராத்திரி அன்று நள்ளிரவில் அபிஷேகம் நடக்கும்.

இவ்விரு கடவுளர்களும் தங்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்திருப்பார்கள் என்று நம்பக்கூடும். இதிலிருந்து நாமும் சில உண்மைகளை உணரக்கூடும். அதாவது, ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உண்டு என்பதை உணரவும், அதே போன்று மற்றவர் பொறுப்புகளை மதிக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம் பொறுப்புக்கு நமக்கு எவ்வளவு சுதந்திரம் உளளதோ, அதே போன்று மற்றவர் பொறுப்பையும் அதன் விளைவுகளையும் நாம் சார்ந்திருக்கிறோம். இதனை உணர்ந்தால் எந்தச் சமூகம் தான் வளர்ந்து முன்னேற முடியாது? இந்நிகழ்ச்சியை அலசினால் இது தவிர மேலும் பல உண்மைகளையும் உணரலாம்.

பிரம்மன் முடியைப் பார்க்க மேலும், விஷ்ணு அடியைப் பார்க்க கீழும் சென்றதற்குப் பதிலாக, பிரம்மன் கீழும் விஷ்ணு மேலும் சென்றிருக்க முடியுமோ? அப்படி கேள்வி கேட்கலாம் என்றாலும், அது இயற்கையானதாக இருக்கமுடியாது. ஒன்றே பிரம்மம் என்ற நிலையை விட்டு பல கடவுளர்கள் என்னும்போது, மனிதர்களைப் போலவே கடவுளர்களுக்கும் ஒரு தனித் தன்மை உண்டு எனலாம். அதனாலாயே, விஷ்ணுவுக்குக் காக்கும் தன்மையும் பிரம்மனுக்கு ஆக்கும் தன்மையும் உள்ளது.
காப்பதற்கு செல்வமும் ஒரு துணை அல்லவா? அதனால்தானோ செல்வத்தின் திருவுருவாம் லக்ஷ்மி விஷ்ணுவின் துணைவியாக உள்ளார்? அதே போன்று, ஆக்குதல், எண்ணங்களை தோற்றுவித்தல், கலைகளை வளர்த்தல் போன்ற எல்லா ஆக்கச் சக்திகளுக்கும் கடவுளான பிரம்மனின் துணையாக சரஸ்வதி உள்ளார். இப்படி அவர்களின் துணைவிகளையும் சேர்த்து நாம் நடந்ததைப் பார்க்கும்போது மேலும் பல தத்துவங்கள் புனலாகின்றன.

siva_as_guru_to_manikkavasagar

காத்தல் என்றாலே ஏதோ ஒரு விதத்தில் செல்வமும் அதனுடன் சம்பந்தப் படுகிறது. அந்தச் செல்வம் உலகு சம்பந்தப்பட்டதுதான். அது நிலம், மனை என்று தொடங்கி மற்ற வகையான செல்வங்களாகவும் தொடர்கிறது. அத்தகைய வசதிகள் சிறிதாவது இருந்தால்தான் வாழ்வில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. அவைகள் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு, வடிவம் என்று கண்ணால் காணக்கூடியது போல் மற்ற புலன்களாலும் உணரக்கூடிய தன்மை உண்டு. அத்தகைய உலக சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி மற்றவர்களை விட தொழில் முனைவோருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அதை அவர்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும்போது சமூகத்திற்கு நன்மையே செய்கின்றனர்; மனிதாபிமானமின்றி செயல் படுத்தும்போது தான் விளைவுகள் மோசமாகின்றன. செல்வம் தவிர உலகு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களும் காத்தல் அம்சத்தில் உள்ளதினாலோ என்னவோ, விஷ்ணுவிற்கு லக்ஷ்மி எனும் ஸ்ரீதேவியைத் தவிர பூதேவி எனும் துணைவியும் உண்டு. இப்படியாக பூமி, செல்வம் சம்பந்தம் விஷ்ணுவிற்கு இருக்கும் போது, அவர் பூமியைத் தவிர்த்து ஆகாயத்தில் பறந்து செல்வதையா எதிர்பார்க்கமுடியும்?

அதே போன்று ஆக்குதல் என்பது உலகு சம்பந்தப்பட்ட பிறப்பு, மற்றும் மனது சம்பந்தப்பட்ட எல்லாவிதமான எண்ணங்கள், திட்டங்கள் போன்ற புலன்களுக்குத் தெரியாத நுண்ணியமானவைகளையும் உற்பத்தி செய்யப்பட்டவைகள் எனக் குறிப்பதாகக் கொள்ளலாம். இவைகள் அனைத்துமே ஒருவர் தம் வாழ்க்கையில் கற்பதற்கு ஏதுவாக அமைந்து அவரை உயர்த்திச் செல்லும். அது தவிர அவைகள் அனைத்துமே உணர்வால் மட்டுமே அறிந்துகொள்ளப்படும் தன்மை வாய்ந்த நுண்ணிய திறன்கள் அல்லது பலன்கள் ஆனதால் உள்ளத்திலிருந்து அவைகள் வெளிப்படும்போதுதான் பேச்சாகவோ, செயலாகவோ மாறக கூடும். அப்படி வரும்வரை அதற்கு ஒரு வடிவமோ, அளவோ இன்றி புகை மூட்டம் அல்லது மேகக் கூட்டம் போல் தளர்ந்து படர்ந்து இருக்கும். அதனாலேயே ஒரு செயல்வீரனோடு ஒப்பிடும் போது வெறும் எண்ணங்கள் மட்டுமே கொண்டவனை ஒரு பனிப் படலத்திலோ மேகக் கூட்டத்திலோ மிதப்பாதகச் சொல்கிறோம். “எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா?” என்பதும் இதை உணர்த்துகிறது. இப்படியாக அறிவு சார்ந்த, கற்றல் சம்பந்தப்பட்ட திறன்களுக்கு அதிபதியான சரஸ்வதியின் துணையான பிரம்மா புகை மண்டலம் அல்லது மேகக் கூட்டம் போல் மேலே போகாது கீழே போவார் என்பதை எப்படி எதிர்பார்க்கமுடியும்? மேற்சொன்ன நிகழ்ச்சியில் அந்த இரு கடவுளர்களும் பின்னர் என்ன செய்தார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்றும், அதில் நமக்கு மேலும் என்ன படிப்பினைகள் இருக்கின்றன என்றும் இப்போது நாம் காணலாம்.

வராக வடிவில் கீழே சென்று கொண்டிருந்த விஷ்ணுவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாக அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. தன்னை விட ஒரு பெரிய சக்தி உள்ளது என்பதை அவர் உணர ஆரம்பித்தார். அதன் விளைவாக மேற்கொண்டு செல்லாமல் திரும்பிய அவர், தன்னை ஒரு சோதனைக்கு உள்ளாக்கிய அந்தச் சோதியினை உணர்ந்தார். ஒருவன் தனது வலிமையின் எல்லையை உணர்ந்ததும், அதற்கும் அப்பால் உள்ள சக்தியைத் தெரிந்து கொள்வது என்பது தானே முறையான வழி? ஒருவன் கை நிறைய சம்பாதித்து செல்வம் கொழித்து இருக்கையில், அவனுக்கு சொல்லொணாத் துயர் வந்தால் என்ன செய்வான்? “செல்வம் இல்லாதபோது, செல்வம் வேண்டினோம்; இதனால் பயனில்லை” என்று அனுபவப்பட்டு, அச்செல்வம் போனாலும் பரவாயில்லை என்று உணர்ந்து அதை இழக்கவும் தயாராக இருப்பான். அந்த நிலையில்தான் அவனுக்கு உலகின் நிலையாமை தெரிய வருகிறது. அவன் துறவுக்குத் தயார் ஆகிறான். இது போன்ற நிலையில்தான் விஷ்ணு இருந்தார்.

கிட்டத்தட்ட இதற்கு நேர் மாறான நிலையில் பிரம்மன் இருந்தார். கீழே விழுந்துகொண்டிருந்த தாழம்பூவைப் பார்த்த பிரம்மனுக்கோ அவரது புத்தி வேலை செய்ய ஆரம்பித்து, மேலிருந்து பூ வந்தால் அது மேலேயுள்ள முடியிலிருந்துதான் வருகிறது என்றும், அதனால் அப்பூவையே தான் முடியைப் பார்த்ததிற்கு சாட்சியாக வரச் சொல்லலாம் என்ற எண்ணமும் தோன்றி அப்படியே செய்கின்றார். இப்படிச் செய்தால் தான் வென்றுவிடுவோம் என்றும் அவருக்குத் தோன்றுகிறது. கலைகளுக்கும், ஞானத்திற்கும் அதிபதியான சரஸ்வதியின் பதிக்கு ஏன் இப்படித் தோன்றியது?.

அறிவு என்பது சரியான முறையில் சரியான மன நிலையில் வளரவில்லை என்றாலும், வெறும் உலக சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருந்தாலும், அது இரு-முனைக் கத்தி போன்று ஒரு விரும்பத்தகாத ஆயுதமாக வளரக்கூடும். அப்போது புத்தியானது குறுக்குப் பாதையில் சென்று, அனைவருக்கும் உதவும் யுக்திகளுக்குப் பதிலாக தீய குயுக்திகளை வளர்க்கும். அது ஒருவனை தாழ் நிலைக்கும் கொண்டுசெல்லும். அதிலிருந்து மீள்வது மிகக் கடினமானதாகிவிடும். உலக வாழ்க்கையிலிருந்தே தன் செயல்கள் மூலம் ஒருவனுக்கு அறிவு வளர்ந்தாலும், அது படிப் படியாக அவனை நல் வழிப்படுத்தி இறுதியில் அறிவுக்கும் ஆதாரமான தன்னை உணரச் செய்வதாக அமைய வேண்டும். அப்படியாகவில்லை என்றால் அது பாழ் அறிவே. அது பொல்லா விளைவுகளையே கொடுக்கும். அதனால் ஒருவன் அனாவசியமாக வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டோ, அனர்த்தங்களைக் கற்பித்துக்கொண்டோ, தவறான வழிகளில் மற்றவர்களை நடத்திக்கொண்டோ வாழ்நாளை வீணாக்குவான். அதுதான் பிரம்மன் விஷயத்திலும் நடந்ததோ?

வாழ்வு நன்கு அமைய ஒருவன் செயல்களில் ஈடுபட வேண்டும். முதலில் அது அடிப்படை தேவைகளுக்கும், பின்பு சில கூடுதல் தேவைகளுக்குமாகத் தொடரும். ஆரம்பத்தில் இருந்த ஆசை பின்பு பேராசையாக மாறினாலும், ஒருவனுக்கு தலையில் இடி போன்று ஒரு துயர நிகழ்ச்சி நேரும்போது இவ்வுலகின் உண்மையை அவன் உணரக்கூடும். ஓடி ஓடித் தேடிய செல்வத்தின் இயலாமையை உணர்வான். ஆனால், அப்படி செயல்களில் ஈடுபடும்போதே அவன் அப்பொருட்களின் நிலையாத் தன்மையையும் உணர்ந்து, செயலை ஒரு கர்ம யோக வழிப்படி செய்து பலன்களில் நாட்டம் கொள்ளாது இருந்திருந்தால் மன முதுர்ச்சியை அடைந்திருப்பான். இவ்வழியில் பலன் கிடைக்க காலதாமதம் ஆகலாம் என்றாலும், பலருக்கும் இது தான் எளிதான, சிறந்த வழி. அவ்வழி செல்லும் போது செயலில் நேர்மை, திறமை கூடுவது அன்றி மனதளவிலும், முடியவில்லை என்னும்போது அதை ஒத்துக்கொள்ளவும், சரண் அடையும் மனப் பக்குவமும் வளரக்கூடும். விஷ்ணு அதைத்தான் செய்தார்.

அறிந்தது அறியாதது இவைகளின் எல்லைகளை உணராத,

 

 

ramana maharishi

பக்குவம் அடையாத அறிவு மிக மிக ஆபத்தானது. மனப் பக்குவத்துடனும் பொறுப்புடனும் வளரும் அறிவே நல்லறிவு. அதுவே ஒருவனை மேல் நோக்கி எழச் செய்யும்; உள் நோக்கி விழிக்கச் செய்யும். இதனையே “அறிவும் அறியாமையும் யார்க்கு என்று அம்முதலாம் தன்னை அறியும் அறிவே அறிவு” என்பார் பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி. பக்குவத்துடன் அறிவு வளரவில்லை என்றால் அந்த அறிவு, தன்னைத் தோண்டி ஞானம் பெற வழி வகுக்காது. பிரம்மனுக்கு நடந்தது போல் குறுக்கு வழியில் செலுத்தி மேலும் பல துன்பங்களைத்தான் கொடுக்கும். அறிவு சார்ந்த ஞான மார்க்கம் நேரான மார்க்கமாக இருந்தாலும், அது சரியான விளைவுகளைக் கொடுப்பதற்கு ஒருவன் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வழியில் தான் யார் என்ற அறிவு சார்ந்த கேள்விதான் கேட்கமுடியும். அதற்குண்டான பதில் இயல்பாக உணர்வில் உதிக்கும் வரை பொறுமையும் முயற்சியும் வேண்டும். அப்போது ஞானிகள் கூற்றுப்படி பிரம்மன், விஷ்ணு என்ற இரு கடவுளரின் உண்மைத் தன்மையும் தெரிய வரும்.

“திருவண்ணாமலையே எல்லாம்” என்று அதனை அடைந்து, இக வாழ்வின் இறுதி வரை அங்கிருந்து எங்குமே செல்லாத பகவான் ரமணர், மற்றும் பல ஞானிகளின் கூற்றுப்படி ஞான மார்க்கமே கர்ம மார்கத்தை விட உன்னதமாகும். மற்ற யோக வழிகள் எல்லாவற்றையும் இவை இரண்டுக்கும் இடையே வரிசைப்படுத்தி விட்டு, அவை எல்லாமே கர்ம மார்கத்தின் வெவ்வேறு முறைகள்தான் என்றும் ரமணர் “உபதேச உந்தியார்” நூலில் குறிப்பாகச் சொல்வார். அதனை இப்படியும் புரிந்து கொள்ளலாமோ? முதலில் நமக்கு உகந்த வழியை எடுத்துக் கொள்வது, அதிலே பழகப் பழக அதுவே நம்மை நுணுக்க முறைகளுக்குக் கொண்டு சென்று அதி உன்னத நிலையான “தன்னை”யும் உணர வைக்கும்.

அப்படியென்றால், பிரம்மா-விஷ்ணுவின் மோதலில் நமக்கு இன்னுமொரு பாடமும் இருக்கிறதோ? ஸ்ரீதேவியும், பூதேவியும் கொண்ட விஷ்ணுவும் சரி, ஞானாம்பிகையான சரஸ்வதியைக் கொண்ட பிரம்மாவும் சரி, இருவருமே தம்தம் அகந்தையின் எழுச்சியினாலேயே வாதத்தைத் தொடங்கினர். விஷ்ணுவோ பாதியிலேயே தன் தவற்றை உணர்ந்து சரணடைகிறார். அதாவது, எப்படிப் பட்ட கரடு முரடான பாதையாக கர்மா வழி தோன்றினாலும், அது ஒருவன் ஆரம்பத்தில் எப்படி இருந்தாலும் அவன் உள்ளத்தைப் பண்படுத்தி உயர் நிலைக்குச் செல்லவைக்கும் ஆற்றல் உடையது என்பதை உணர வைக்கிறதோ? மிக நுண்ணியதான ஞானப் பாதை நேர் வழிதான் என்றாலும் அதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாது செய்யப்படும் பயிற்சியால் கர்வம் மிகுந்து தவறான வழிக்கும் கொண்டு செல்லக் கூடிய அபாயம் உள்ளது. அதைத்தான் - மனம்-புத்தி-அகங்காரம் அளவிலேயே “தான் யார்” என்று தன் உண்மை நிலையைத் தேடுபவருக்கும் நேரலாம் என்பதைத்தான் - பிரம்மாவின் வீழ்ச்சி குறிப்பாக உணர்த்துகிறதோ?

இப்படியாக, நமது புராண, இதிகாச நிகழ்ச்சிகளும் நமக்கு வழி வழியாக வந்திருக்கும் வேத-உபநிஷத உண்மைகளையும், முறைகளையும் தான் உருவகங்களாக உபதேசிக்கின்றன. அவைகள் அனைத்திலும் உள்ளதை உள்ளவையாக உண்மை உணர்வுடன் தேடினால், நமக்குக் கிடைத்தற்கு அரிய பொக்கிஷங்கள் கிடைக்கும் என்பதே எனது தாழ்மையான அபிப்ராயம்