Thursday, October 31, 2013

கந்த சஷ்டியின் தத்துவம்




(நாளை மறுநாள் கந்த சஷ்டி ஆரம்பம் 03-11-2013)

முருகன், குமரன், குகன், கந்தன், ஆறுமுகன் என்றெல்லாம் பக்தர்களால் புகழப்பெறும் செந்தமிழ்க் கடவுளின் பல்வேறு விழாக்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற விழா கந்த சஷ்டிப் பெருவிழா. "சஷ்டி' என்றால் ஆறு என்று பொருள். எனவே சஷ்டி விழா ஆறுநாள் விழாவாகும். கச்சியப்ப சிவாசாரியரின் கந்த புராணமும், பாம்பன் சுவாமிகளின் முதல்வன் புராண முடிப்பும் இவ்விழாவை விளக்குகின்றன.

தேவர்களைக் கொடுமைப்படுத்தி சூரபத்மன், அவன் தம்பிகளாகிய தாருகன், சிங்க முகன் ஆகியோரோடு முருகப் பெருமான் போரிட்டு வென்று தேவர்களை சிறை மீட்டு, அவர்களுக்கு ஆட்சியுரிமை தந்து, தேவருலகை வாழ வைத்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது கந்த சஷ்டிப் பெருவிழா. இப்போர் நடைபெற்ற இடம் திருச்செந்தூர்.

போருக்குப் பின்னர் முருகன், இந்திரன் மகளாகிய தெய்வயானையை மணம் செய்த இடம் திருப்பரங்குன்றம். அது ஏழாம் நாள் விழா.

ஆன்மாக்களுக்கு அல்லது மானிட உயிர்களுக்கு மூன்று வகையான அழுக்குகள் உண்டு. மூலமாகிய முதல் அழுக்கே ஆணவம். அதை ஒட்டி ஆண்மாக்களுக்கு உண்டாகிய இரண்டு அழுக்குகள் உண்டு. அவை மாயை, கன்மம். மாயையானது உலகப் பொருள்களில் கவர்ச்சியை உண்டாக்கி ஆன்மாக்களுக்கு மோகத்தை உண்டு பண்ணும். சூரபத்மனின் ஒரு தம்பியாக நின்ற தாருகனே மாயை மயமாக நின்று செயல்படுபவன்.

அடுத்த அழுக்கானது கன்மம். இதுவும் இரண்டு வகைப்படும். நல்வினை, தீவினை என சிங்கமுகன் கன்ம மயமாக நின்றவன்.

மூன்றாவது மூல அழுக்கே ஆணவம். இதுவும் நான் என்றும், எனது என்றும் செயல்படும். சூரபதுமன் ஆணவ மயமாக நின்றவன். மூன்று அழுக்குகளும் ஆறாகப் பிரிந்து செயல்பட்டன. ஆகையால் ஆறு நாட்களில் அவற்றை அழித்து ஆன்மாக்களுக்கு உண்மை ஞானம் கொடுத்தான் கந்தன் என்பதே கந்த சஷ்டிப் பெருவிழாவின் தத்துவம்.

கந்தப் பெருமான் சூரபத்மனை வென்று அவனை தன் மயில் வாகனமாகவும், சேவற் கொடியாகவும் மாற்றினான். சிங்க முகாசூரன் உமையம்மையின் சிங்க வாகனமாக மாற்றப்பட்டான். தாரகாசூரன் 
அய்யனாரின் யானை வாகனமாக ஆக்கப்பட்டான்.

கந்த சஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டித்தால் கந்தப் பெருமான் திருவடியடைந்து நிலைத்த இன்பம் பெறலாம்