Saturday, August 16, 2014

கிருஷ்ணரை பற்றி 50 குறிப்புகள்



1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.

2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.

3. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.

4. சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

5. கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.

6. கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு.

7. கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.

8. கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

9. கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.

10. கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் ``அஷ்டமி ரோகிணி'' என்றழைக்கிறார்கள்.

11. கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ``ராசலீலா'' என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.

12. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.

13. கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.

14. கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

15. கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற ``கீதகோவிந்தம்'', ``ஸ்ரீமந் நாராயணீயம்'', ``கிருஷ்ண கர்ணாம்ருதம்'' ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.

16. கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர்- சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்துசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

17. கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சிலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

18. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.

19. விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும்.

20. தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.

21. கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.

22. கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.

23. பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.

24. கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

25. ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணர் பார்வைபடும்.

26. ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா தலத்தில் அருள்புரியும் கிருஷ்ணரான ஸ்ரீநாத்ஜீக்கு என்னென்ன நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள், மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள்

27. துவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று பெயர். ஜகத் மந்திர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் பிரதான வாசலின் பெயர் சுவர்க்க துவாரம். இது எந்த நேரமும் திறந்தே இருக்கும். இதைதாண்டி சென்றால் மோட்ச துவாரம் வரும். அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும்.

28. கண்ணனின் லீலைகளை விளக்கும் `கர்பா' என்ற நாட்டியம் குஜராத்தில் பிரபலம. இது தமிழ் நாட்டு கும்மி, கோலாட்டம் போல் நடத்தப்படுகிறது. நீராடும் கோபி யர்களின் ஆடைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்லுதல், வெண்ணெய் திருடி உண்ணுதல் போன்ற கண்ணன் புரிந்த லீலைகள், அந்த நாட்டியத்தின் மூலம் அழகாக எடுத்துரைக்கப்படுகின்றன.

29. உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் பூஜைக்குரிய பொருட்கள் வாங்கும் போது மரத்தாலான மத்து ஒன்றையும் வாங்கும் பழக்கம் பக்தர்களுக்கு உண்டு. உடுப்பியை அன்னப்பிரம்மா என்றும், பண்டரி புரத்தை நாத பிரம்மா என்றும் போற்றுகின்றனர்.

30. கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கிழக்கு நோக்கி அருள்கிறார் கிருஷ்ணன். இவருக்கு பால், பாயாசம், நைவேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயாசம் தயாரிக்கின்றனர்.

31. குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தலமான குருவாïரில் உள்ள உன்னிக் கிருஷ்ணன் விக்கிரகம் பாதாள அஞ்சனம் என்னும் அபூர்வ மூலிகை பொருளால் ஆனது.

32. வைணவத் திருத்தலங்களில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிப்பது போல் முக்தி தரும் திருத்தலமாக துவாரகையில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோவில். பகவான் கிருஷ்ணர் இங்கு சயனக் கோலத்தில் அருள்புரிகிறார்.

33. கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

34. மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது, அந்த இடத்திற்கு மேல் `கத்ர கேஷப்தேவ்' என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

35. கிருஷ்ண வழிபாடு நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கிருஷ்ணனைப் பற்றிய மிகப் பழமை வாய்ந்த ஆதாரம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திரனுடன் கிருஷ்ணர் போரிட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

36. சாந்தோக்ய உபநிஷத்தில் கிருஷ்ணன் தேவகியின் மகன் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

37. அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், மருத்துவ தொழிலை தொடங்குபவர்கள் கிருஷ்ணனை வழிபட்ட பிறகே தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.

38. அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் (புருஷோத்தமர்) தனது படைகளுக்கு முன்னாள் கிருஷ்ணனின் உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றி பெற கிருஷ்ணனே காரணம் என கருதினார்.

39. யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.

40. சிலப்பதி காரத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் என்றும், மனைவி நப்பின்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள் என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும், ராதை மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மையானவள் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நப்பின்னையை ஆழ்வார்களும் பாராட்டியுள்ளனர்.

41. ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டால் பூதி இருளடைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது.

42. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் ஆலயத்தில் உள்ள வேணுகோபாலன் சிலை நேபாளம் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜெயந்தியன்று இங்கு பெருமாளுக்கு கண்திறப்பு, சங்கில் பால் புகட்டும் வைபவங்களும் நடக்கின்றன.

43. செங்கத்தில் பத்மாவதி ஆண்டாளுடன் கண்ணன் தரிசனம் தருகிறார். பரம பக்தனான ஏழைக்கு புதையலைக் காட்டிய பெருமாள் இவர்.

44. கண்ணன், ராஜகோபாலனாக செங்கமலவள்ளி நாச்சியாருடன் அருளும் கோயில் கடலூர், புதுப் பாளையத்தில் உள்ளது. திருப்பதி பெருமாளுக்கான காணிக்கைகளை இங்கு சேர்க்கலாம்.

45. மூலவர் கோபிநாதராகவும், உற்சவர் கிருஷ்ண ராகவும், திண்டுக்கல், ரெட்டியார் சத்திரத்தில் அருள்கிறார்கள். இந்த கண்ணன் கால்நடைகளை காப்பதாக ஐதிகம்.

46. கண்ணன் பாமா-ருக்மிணியுடன் அருளும் ஆலயம் மதுரை குராïர் - கள்ளிக்குடியில் உள்ளது. இங்குள்ள நந்தவனத்திலுள்ள புளியமரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை. குழந்தைகள் கல்வியில் சிறக்க, இங்கே மாவிளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

47. காஞ்சிபுரம், மணிமங்கலத்தில் ராஜகோபாலசுவாமி, செங்மலவல்லித் தாயாருடன் கோயில் கொண்டுள்ளார். பெருமாள் இடது கையில் சக்கரமும் வலது கையில் சங்கும் ஏந்தியிருப்பது அதிசயம்.

48. சென்னை ஆதம்பாக்கம், சாந்தி நகரில் பாண்டு ரங்கன் ஆலயம் உள்ளது. பண்டரிபுரத்தில் உள்ள போலவே கோபுர அமைப்புடன் இந்த ஆலயம் உள்ளது.

49. தென்னாங்கூர், பாண்டுரங்கன் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோற்றத்தில் பாண்டுரங்களையும் ருக்மணியையும் அலங்கரிக்கின்றனர்.

50. மதுரை - அருப்புக்கோட்டை பாதையில் கம்பிக்குடியில் கோயில் கொண்டிருக்கும் வேணுகோபாலசுவாமி, நோயினால் துன்புறும் குழந்தைகளை தெய்வீக மருத்துவனாகக் காப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

Thursday, August 14, 2014

நந்தி - 50 தகவல்கள்






1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.

2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.

5. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.

6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.

7 தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.

8. மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை'' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.

9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.

10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.

11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.

13. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.

14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.

15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.

17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.

18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.

19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.

20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.

21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.

22. காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.

23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.

24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

25. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.

26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்

28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.

29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.

30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.

31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.

32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.

33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.

34. `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.

35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.

36. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.

37. நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.

38. நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.

39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.

40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.

41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.

42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.

43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.

44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.

45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.

46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானி டம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.

47. நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.

48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.

49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.

50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.*



Saturday, March 22, 2014

போஜராஜன் சபையில்…



போஜராஜன் தன் தலைநகரான தாரா நகரை கலைகளின் சிகரமாகவே வைத்திருந்தான். கவிஞர்கள், தத்துவ மேதைகள் அவன் ஆட்சியில் பெரு மதிப்பு பெற்று சிறந்து விளங்கினர். காவியங்கள் இயற்றினர். அவனது சபையில் காளிதாசன், பாணன், வரருசி, தண்டி என்று சம்ஸ்க்ருத கவிஞர்கள் பலரும் வீற்றிருந்தார்கள். அரசர்களை அண்டி பரிசு பெற்று செல்வது பாணர்கள் கவிஞர்கள் வழக்கம். இதனால் போஜ மகாராஜனின் அவையில் தினம் ஒரு சுவையான சம்பவம் நிகழும்.

சில சமயம் போஜன் கவிதையில் ஒரு அடி மட்டும் கொடுக்க மற்ற கவிஞர்கள் அதனை நிறைவு செய்ய முயற்சி செய்வர். இதற்கு ஸமஸ்யா பூர்த்தி என்று பெயர். பெரும்பாலும் காளிதாசனே ஸமஸ்யா பூர்த்தி செய்வதில் சிறந்து விளங்கினான்.  போஜன் காளிதாசனை தன் ஆருயிர் நண்பனாகவும் கொண்டிருந்தான். இவர்கள் குறித்து தமிழில் கூட சிவாஜி கணேசன் காளிதாசனாக நடித்து வெளிவந்த மகாகவி காளிதாஸ் (1966) திரைப் படம் பலருக்கு நினைவிருக்கும். இதில் போஜ ராஜனாக முத்துராமன் நடித்திருந்தார்.

போஜ மகாராஜன் அரசவையில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களைப் பற்றி பார்ப்போம்.
***
ஒரு முறை போஜ ராஜனின் சபையில் திருடன் ஒருவனை பிடித்து வந்தார்கள். அவனை யாரென்று விசாரித்து, அவனது செய்கையின் பேரில் கடும் கோபம் கொண்ட போஜன், மரண தண்டனை விதித்தான். அப்போது அந்த திருடன், போஜனை நோக்கி  அழகிய சம்ஸ்க்ருத கவிதை ஒன்றை சொன்னான்:

ட்டிர்நஷ்டோ பாரவீயோ'பி நஷ்டோ பிக்ஷுர்நஷ்டோ பீமஸேநோ'பி நஷ்ட: |
புக்குண்டோ³ஹம் பூபதிஸ்த்வம் ஹி ராஜந்பாபங்க்தாவந்தக: ஸம்நிவிஷ்ட: ||

भट्टिर्नष्टो भारवीयोऽपि नष्टो भिक्षुर्नष्टो भीमसेनोऽपि नष्ट: |
भुक्कुण्डोऽहं भूपतिस्त्वं हि राजन्भापङ्क्तावन्तक: संनिविष्ट: ||

மரண தண்டனை பெற்ற திருடன் சொல்கிறான், ஹே ராஜன், பட்டி நஷ்ட: (பட்டி மரணமடைந்தார்), பாரவி நஷ்ட: பாரவியும் மரணமடைந்தார், பிக்ஷுவும் மரணமடைந்தார். பீமசேனனும் மரணமடைந்தார். புக்குண்டன் நான், பூபதி நீங்கள், ப..பாவரிசையில் யமன் நுழைந்திருக்கிறான்என்று சொன்னான். அவன் சொன்ன கவிதையில் இருந்த நகைச்சுவையை ரசித்து,  "தொலைந்து போ.." என்று போஜன் அவனை மன்னித்து அனுப்பினான்.
***
அக்காலத்தில் மன்னர்கள் நள்ளிரவில், மாறுவேடத்தில் தன் நகரை சுற்றி வந்து, நேரடியாக நகரின் நிலை பற்றி அறிந்து கொள்வர். திருடர் அபாயம் இல்லாது இருக்கிறதா, சாலை, தண்ணீர் கிணறு, தர்ம சத்திரம் போன்ற பொது வசதிகள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கிறதா, சந்தேகப் படும் படி ஒற்றர் நடமாட்டம் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள இவ்வாறு ஊரைச் சுற்றி வருவதற்கு பெயர் நகர்வலம்.
போஜனும் ஒரு முறை நகர்வலம் வரும் போது ஒரு வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தான். நள்ளிரவில் விளக்கெரிய காரணம் என்ன என்று அறிந்து கொள்ள, நெருங்கிச் சென்று சாளரம் (ஜன்னல்) வழியாகப் பார்த்தான். உள்ளே ஒரு அதிசயக் காட்சி. அந்த வீட்டில் மனைவி அமர்ந்திருக்க கணவன் அவள் மடியில் தலைவைத்து படுத்திருந்தான். அவர்களது அருகில் தூளியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை கண்விழித்து துளியை விட்டு இறங்கி விட்டது.
அருகில் இருந்த விளக்கைப் பார்த்து அதன் அருகில் செல்ல துவங்கியது. இதைக் கண்ட மனைவி பதறி, அக்னி தேவனைத் துதித்தாள். பதிவிரதையான அவள், கணவனை உறக்கத்திலிருந்து எழுப்புவது பாவம் என்று அக்னி தேவனை நோக்கி தன் சிசுவை எரித்து விடாதே என்று வேண்டினாள். அந்த குழந்தை விளக்கின் நெருப்பைத் தீண்டியும் தீ சுடவில்லை. ஆச்சரியமான இந்த நிகழ்வைக் கண்டான் போஜன்.

மறுநாள் அவையில் இந்த நிகழ்வை மனதில் வைத்து புலவர்களைப் பார்த்து சொன்னான் "நேற்று இரவு ஒரு அதிசய நிகழ்ச்சியைப் பார்த்தேன்.  ஒரு வீட்டில் தீ சந்தனக் குழம்பானது" ("ஹுதாசனஸ் சந்தன பங்க சீதள:") என்று சொன்னான். அப்போது   சரஸ்வதியின் அவதாரம் என்று கருதப் பட்ட மகாகவி காளிதாசன் என்ன நடந்தது என்று தன் ஞானக் கண்ணால் அறிந்தான். அதை ஒரு கவிதையாகவும் சமைத்தான்:

ஸுதம்பதந்தம் ப்ரஸமீக்ஷ்ய பாவகே ந போ³யாமாஸ பதிம் பதிவ்ரதா |
³தா³வத் தத்பதி பக்திகௌ³ரவாத்³ தாஸநஸ்²சந்த³நபங்கஸீ²தல: ||

सुतंपतन्तं प्रसमीक्ष्य पावके बोधयामास पतिं पतिव्रता |
तदाभवत्तत्पति भक्तिगौरवा द्हुतासनश्चन्दनपङ्कशीतल:: ||

பதிவ்ரதா பதிவிரதை ஒருத்தி, பாவகே நெருப்பிலே, பதந்தம் சுதம் இறங்கி விட்ட மகனை, ப்ரஸமீக்ஷ்ய விலக்க, பதிம் கணவனை, ந போ³யாமாஸ உறக்கத்திலிருந்து எழுப்பவில்லை. அயர்ந்து உறங்கும் தன் கணவனை எழுப்ப அவள் விரும்பவில்லை.  ததா³ – அப்போது, தத்பதி பக்திகௌ³ரவாத் அவளுடைய பதி பக்திக்கு மரியாதை கொடுத்து, ஹுதாஸந தீ, சந்த³நபங்கஸீ²தல: சந்தனக் குழம்பாக (குழந்தையை சுடாமல்) ஆனது.

இவ்வாறு காளிதாசன் நடந்த சம்பவத்தை கவிதையாக சொன்னான். அரசனும் மகிழ்ந்து காளிதாசனுக்கு பரிசில் கொடுத்தான். தருமங்கள் செழித்து வளர்ந்த போஜன் அரசாட்சியில் பதிவிரதா தர்மமும் சிறந்து விளங்கியது.

***
ஒருமுறை போஜராஜன் காட்டுக்கு வேட்டைக்கு போனான். அப்போது வேட்டையாடிக் கொண்டே காட்டினுள் தனியாக வெகுதூரம் போய்விட்டான். பல காத தூரம் பயணத்தால் களைப்புற்று ஒரு நாவல் மரத்தடி நிழலில் அமர்ந்தான். அந்த மரத்தின் அருகிலேயே ஒரு குளமும் இருந்தது. அந்த மரத்தின் மீது பல குரங்குகள் இருந்தன. அவை ஒவ்வொரு நாவல் பழமாக பறித்து குளத்தில் போட 'குளுக்' 'குளுக்' என்று சத்தம் எழுந்தது. இதை ராஜன் பார்த்தான். பிறகு களைப்பு நீங்கி தான் வந்த குதிரையில் ஏறி அரண்மனைக்கு திரும்பினான். மறுநாள் அவையில் ஸமஸ்யா பூர்த்தி செய்யும் போட்டி ஒன்றை அறிவித்து "கு³ளு கு³க்³கு³ளு கு³க்³கு³ளு" என்று ஒரு அடியைக் கொடுக்க, எல்லோரும் இதை வைத்து எப்படி கவிதை இயற்றுவது என்று விழித்தனர்.

வரம் பெற்ற கவியான காளிதாசன் அதனை நிறைவு செய்தான்.

ஜம்பூ³²லாநி பக்வாநி பதந்தி விமலே ஜலே |
கபிகம்பிதஸா²கா²ப்யோ கு³ளு கு³க்³கு³ளு கு³க்³கு³ளு ||

जम्बूफलानि पक्वानि पतन्ति विमले जले |
कपिकम्पितशाखाभ्यो गुलुगुग्गुलुगुग्गुलु ||

கபிகம்பித  ஸா²கா²ப்யோ குரங்குகளால் அசைக்கப் பட்ட கிளைகளில் இருந்து, பக்வாநி ஜம்பூ³²லாநி பழுத்த நாவல் பழங்கள், விமலே ஜலே பதந்தி தெளிந்த நீரில் விழுந்தன, விளைவாக "கு³ளு கு³க்³கு³ளு கு³க்³கு³ளு" என்ற சப்தம் எழுந்தது.
குரங்குகளால் உலுக்கப் பட்ட நாவல் மரக்கிளையிளிருந்து பழுத்த பழங்கள் தெளிந்த நீரில் விழும் சப்தமே அது என்று அற்புதமாக நேரில் பார்த்தது போல் சொல்லவும் மகாராஜன் ஆச்சரியப்பட்டு காளிதாசனைப் பலவாறு பாராட்டினான்.
***
ஒரு முறை  போஜ ராஜன் குளிப்பதற்காக, அரண்மனையில் இருந்த ஒரு சிறு குளத்திலிருந்து நீரெடுத்துக் கொண்டு அரச குடும்பத்து பெண் ஒருத்தி படி ஏறும் போது கைதவறி குடம் படிகளில் விழுந்து உருண்டது. இதைக் கண்ட அரசன் அந்த குடம் உருண்ட சத்தத்தை கவிதையில் பொருத்தினால் எப்படி இருக்கும் என்று நினைத்து, அரச சபைக்கு வந்தவுடன் காளிதாசனைப் பார்த்து, "டடண்டடண்டண்டடடண்டடண்டம்" இதைப் பூர்த்தி செய் பார்ப்போம் என்றான், காளிதாசன் கவிதையாக்கினான்

ராஜாபிஷேகே மத³விஹ்வலாயா ஹஸ்தாச்ச்யுதோ ஹேமகடோ யுவத்யா: |
ஸோபாநமார்கே³ ப்ரகரோதி ஸ²ப்³³ம் டடண்டடண்டண்டடடண்டடண்டம் ||

[राजाभिषेके मदवीह्वलाया हस्ताच्च्युतो हेमघटो युवत्या:
सोपानमार्गे प्रकरोति शब्दं टटंटटंटंटटटंटटंटम् ]

ராஜாபிஷேகே அரசனுக்கு அபிஷேக காலத்திலே, மத³விஹ்வலாயா காமத்தால் பீடிக்கப் பட்ட, அழகிய கண்களை உடைய பெண், படிகளில் குடத்தை தவற விட்ட போது எழுந்தது சப்தம் "டடண்டடண்டண்டடடண்டடண்டம்".

***
இவ்வாறு அரசனுடன் நெருங்கிய நண்பனாகவும், தலைசிறந்த கவிஞனாகவும் காளிதாசன் இருப்பது பலருக்கும் பொறாமை ஏற்படுத்தியது. காளிதாசன் மீது காழ்ப்பு கொண்டனர். அரசனிடம் சென்று காளிதாசனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வெறுப்பு ஏற்படுத்தத் முயன்றனர். போஜன் இது எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. கோள் மூட்ட வந்தவர்களைப் பார்த்து நீங்கள் எல்லோருமாக சேர்ந்து காளிதாசனுடைய கவிதைக்கு ஈடாக ஒரே ஒரு கவிதை எழுதுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டான்.

பொறாமைக் காரர்கள் எல்லோரும் ஓருநாள் காலையில் ஒரு தர்ம சத்திரத்தில் உட்கார்ந்து கவிதை எழுத முயன்றனர். மாலைவரை முயன்றும் ஒரே ஒரு வரிதான் எழுத முடிந்தது.

போஜநம் தே³ஹி ராஜேந்த்³ர [भोजनम् देहि राजेन्द्र] ஹே ராஜா, சாப்பாடு கொடு

இவ்வாறு  ஆரம்பிக்கவே நாக்கு தள்ளிப் போய்விட்டது அவர்களுக்கு. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சாப்பாடுதான்.  அடுத்த வார்த்தை அவர்களில் ஒருவர் எடுத்துக் கொடுத்தார். எப்படிப் பட்ட சாப்பாடு வேண்டும் என்று எழுதுவோமே என்று,

க்ருதஸூபஸமந்விதம் [घृतसूपसमन्वितम्] நெய்யும் பருப்பும் கலந்ததாக (சாப்பாடு கொடு)

இதற்கு மேல் என்ன முயன்றும் அவர்களுக்கு எழுத இயலவில்லை. வேறு வழியின்றி அந்த வழியாக வந்த காளிதாசனிடமே சரணடைந்தனர். இவர்களுக்காக மனம் இறங்கி சொன்னான்

மாஹிஷம் ச ஸ²ரச்சந்த்³ரசந்த்³ரிகாதவலம் த³தி⁴ 
[माहिषम् शरच्चन्द्रचन्द्रिकाधवलम् दधि]

சரத்கால (குளிர்கால) சந்திரனைப் போல வெண்மையான எருமைத் தயிருடன்
அதாவது சரத்கால (குளிர்கால) சந்திரனைப் போல வெண்மையான எருமைத் தயிருடன், நெய்யும் பருப்பும் கலந்ததாக (சாப்பாடு கொடு)

போஜநம் தே³ஹி ராஜேந்த்³ர க்ருதஸூபஸமந்விதம் |
மாஹிஷம் ச ஸ²ரச்சந்த்³ரசந்த்³ரிகாதவலம் த³தி⁴  ||

भोजनम् देहि राजेन्द्र घृतसूपसमन्वितम् |
माहिषम् शरच्चन्द्रचन्द्रिकाधवलम् दधि ||

ஆவலுடன் இதைக் கொண்டுபோய் தாங்களே எழுதிய கவிதை என்று காண்பித்தார்கள். ஆனால் போஜன் இந்த கவிதை இவர்களால் கண்டிப்பாக எழுதஇருக்க முடியாது. இதில் காளிதாசனின் முத்திரை இருக்கிறது என்று உணர்ந்தான். அதனால் உண்மையில் யார் எழுதியது என்று அவர்களை மிரட்டிக் கேட்கவும், ஒப்புக் கொண்டனர். கோபம் கொண்ட ராஜனை காளிதாசன் சாந்தப் படுத்தி, பொறாமை கொண்டவர்களையும் மன்னித்து அவர்களுக்கும் பரிசில் பெற்றுத் தந்தான்.

***
ஒரு முறை போஜராஜனுக்கு விபரீத ஆசை ஒன்று ஏற்பட்டது.  அழகாக கவிதை எழுதுகிற காளிதாசன் வாயால் தனக்கு ஒரு இரங்கற்பா (சரம ஸ்லோகம்) பாடிக் கேட்க வேண்டும் என்பது தான். ஒருவர் இறந்தபின், அவரை நினைத்து இயற்றப் படுவதே இரங்கற்பா. இதை காளிதாசன் இயற்றி தான் உயிரோடு இருக்கும் போதே கேட்கவேண்டும் என்று ஆசைப் பட்டான் போஜன். அவனது பிடிவாத குணம் தெரிந்த காளிதாசன், சரஸ்வதி அனுக்கிரகம் பெற்ற தன் வாயால் ஒரு வார்த்தை சொன்னால் அது அப்படியே சத்தியமாக பலித்து விடும் என்று எண்ணி போஜன் அரண்மனையை விட்டே சென்று விட்டான்.
காளிதாசனைப் பிரிந்து போஜ மகாராஜன் மிகுந்த துயருக்கு ஆளானான். ஒரு காபாலிகன் வேடம் அணிந்து பல நாட்கள் காளிதாசனைத் தேடி அலைந்தான். இறுதியில் ராஜ்ஜியத்தின் எல்லையில் காளிதாசனைக் கண்டு பிடித்தான்.  சென்று அவனை வணங்கவும், காளிதாசன் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க, தாரா நகரத்தில் இருந்து வருகிறேன் என்றான் காபாலிகன் வேடத்தில் இருந்த போஜன்.  "அப்படியா, அங்கே போஜராஜன் சௌக்கியமாக இருக்கிறாரா" என்று காலிதாசன் கேட்க, "எப்படிச் சொல்வது, போஜன் மரணம் அடைந்தார். " என்று போஜனே சொன்னான். சொல்ல ஒண்ணாத துயருடன் தரையில் விழுந்த காளிதாசன் வாயில் எழுந்தது சரம ஸ்லோகம்,

அத்ய தாரா நிராதாரா நிராலம்பா³ ஸரஸ்வதி |
 [अध्य धारा निराधारा निरालम्बा सरस्वति |]

பண்டி³தா: க²ண்டி³தா: ஸர்வே போஜராஜே தி³வம்  ³தே || 
[पण्डिता: खण्डिता: सर्वे भोजराजे दिवं  गते ||]

இன்று தாரா நகரம் நிராதரவானது. பண்டிதர்கள் சமூகம் சின்னாபின்னமானது. ஏனெனில் போஜராஜன் மரணம் அடைந்தான் (திவம் கதா).

காளிதாசன் வாக்கு சத்தியம். உடனே பலித்தது. அதுவரை பேசிக் கொண்டிருந்த காபாலிகன், பொத்தென்று தரையில் விழுந்தான். ஈனக் குரலில், "நானே போஜன்" என்று சொல்ல, காளிதாசன், "மகாராஜா இப்படி ஏமாற்றி விட்டீர்களே" என்று வருந்தி உடனே அந்த கணமே கவிதையை மாற்றி பாடினான்,

அத்ய தாரா ஸதா³ தாரா ஸதா³லம்பா³ ஸரஸ்வதி |
பண்டி³தா: மண்டி³தா: ஸர்வே போஜராஜே புவம்  ³தே ||

अध्य धारा सदा धारा सदालम्बा सरस्वति |
पण्डिता: मण्डिता: सर्वे भोजराजे भुवं  गते ||]

இன்று தாரா நகரம் ஆதரவு பெற்றது, சரஸ்வதி மகிழ்ந்தாள். பண்டிதர்கள் அலங்கரிக்கப் பட்டனர். ஏனெனில் போஜன் மண்ணுலகில் வந்து உதித்ததால். என்று மாற்றினான்.

போஜனும் பிழைத்தான். இவ்வாறு பலகாலம் காளிதாசனும் போஜனும் அறிவாற்றல் மிகுந்த இரு நண்பர்களாக, கவிஞனும் ரசிகனுமாக மகிழ்ந்து வாழ்ந்து வந்தனர்.

***
இது வரை விவரித்து வந்த சம்பவங்கள் யாவும் நடந்த வரலாறல்ல. காளிதாசன் காலத்துக்கும், போஜ ராஜன் காலத்துக்கும் சம்பந்தமே இல்லை. இருவரும் வரலாற்றில் வேறு வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்தவர்கள். இது வரை விவரித்த சம்பவங்கள் எல்லாம், பதினாறாம் நூற்றாண்டில் (1500-1600) வாழ்ந்த பல்லாளசேனர் என்கிற சம்ஸ்க்ருத கவிஞரின் கற்பனையே இவை. அவர் எழுதி வைத்த போஜ பிரபந்தம் என்கிற நூலில், இது போன்ற பல சம்பவங்களைக் கோர்த்து எழுதி இருக்கிறார்.

போஜனைப் போன்ற புலவர்களைப் போற்றும் ஒரு மகாராஜனும், வரலாற்றின் தலைசிறந்த கவிகளும் ஒரே காலத்தில், ஒரே நாட்டில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்கிற உயரிய கற்பனைதான் இந்த போஜ பிரபந்தம் என்கிற நூலின் அடிப்படை. சுவாரசியமான இந்த நூல் மிகவும் பிரபலம். இந்த நூலில் விவரித்துள்ள சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்திய தேசத்தின் அனைத்து மொழிகளிலும் நாடகங்கள், திரைப்படங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.  சுவாரசியமான இந்த நூல் ஹிந்தி மொழி பெயர்ப்புடன் கீழ்கண்ட உரலில் கிடைக்கிறது.