Thursday, January 23, 2014

தீராத கடனையும் தீர்க்கும் தோரண கணபதி!





சனாதன தர்மக்கடவுளான கணபதி, இடத்திற்கேற்ப அருள் வழங்குபவர். அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும். வன்னி மரத்தடி விநாயகர், கிரஹ தோஷங்கள் விலக்குவார். ஆலமரத்தடி விநாயகரை வழிபடுவதால் சூன்யங்கள் அகலும். வேப்பமர விநாயகர் அருளால் தீராத, நாட்பட்ட நோய்கள் மறையும். ஆலயங்களில் உள்ள கோஷ்ட விநாயகரை வணங்க, அனைத்து தெய்வங்களின் திருவருளும் கிடைக்கும். நாவல் மரத்தடி விநாயகரை வழிபடுவதால் பிள்ளைகளுக்கு அறிவு வளரும். நடன கணபதி, கலைகளில் சிறந்து விளங்கச் செய்வார்.  

ஆற்றங்கரை விநாயகர், பாவங்களை எளிதாகக் கரைத்துவிடுவார். இடத்திற்கேற்றபடி அமர்ந்தருளும் ஆனைமுகனைப் பற்றி ஆலயமும் கணபதி அம்சங்களும்என்ற விதிகளின்படி, சிவாலயங்களில் அம்மன்  சந்நிதானத்தின் பக்கவாட்டிலும் முருகன் சந்நதி முகப்புகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கணபதி மூர்த்தங்கள், சக்தி வாய்ந்தவை. இந்த மூர்த்தங்களில் தோரண வாயில்களுக்கு நேராக அமர்ந்திருப்பவர் தோரண கணபதி எனப்படுகிறார். தோரண கணபதியின் அருட்தன்மை சக்தி தேவி தனியாகக் கோயில் கொண்டிருக்கும் திருத்தலங்களில் தோரண வாயில் என்ற அமைப்பு உள்ளது.

அதனுள் பிரவேசிக்கும்போது  பலிபீடத்திற்கு அருகில் வலப்பாகத்தின் மேகலையில் ஸ்ரீதோரண கணபதியை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அனைத்து வகையான கணபதி  மூர்த்தங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்தத் தோரண கணபதிக்கு இருக்கிறது. ஜடாமகுடமும் கழுத்தில் ருத்ராட்ச மாலையும் வலக்கரத்தில்  அங்குசமும் இடது மேற்கரத்தில் பாசமும், இடது கீழ்க்கரத்தில் மோதகமும் வலக்கரத்தில் தந்தமும் வைத்துக்கொண்டு வலக்கையில் உள்ள  தந்தத்தைப் பயன்படுத்தி தன்னை வணங்குவோர் வாழ்வில் உள்ள கடன் என்கின்ற ருணத்தைத் தீர்த்து அருள் செய்கிறார் என்று சிவாகமத் துதிகள் சொல்கின்றன.

மூல ஆலயத்திலிருந்து நோக்கும்போது இவர் அமர்வது பிரம்ம ஸ்தானமாக அமைவதால் கடனைத் தீர்ப்பதில் இவர் கறாராக இருக்கிறார். எப்போதுமே வலம்புரி கணபதியாக இருப்பவர்; அதிக சாந்நித்தியம் உடையவர். பத்ம பீடம் என்கிற தாமரை பீடத்தில் அமர்ந்தவராய் அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமி கடாட்சத்தை அருளும் சக்தி கொண்டவர் இவர். கோஷ்டங்களை ஒட்டிய மேகலைப் பகுதியிலும் தோரண வாயிலுக்கு எதிராகவும் அமரும் கணபதிக்கு இந்த விசேட சக்தி உள்ளதால், அத் தலங்களுக்குச் சென்று வணங்கினால் பலனும் கிடைத்து விடுகிறது.

பிள்ளையார்பட்டி, மயிலாடுதுறை, வாரணாசி ஆகிய இடங்களிலும், சிரு ங்கேரி சாரதா பீடத்துடன் கூடிய சாரதாம்பாள் சந்நதியிலும் தோரண கணேசர் அமர்ந்துள்ளார். கடன் தீர்க்கும் கணபதி வழிபாடு மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவகடன், பித்ருகடன், மானுடக் கடன்களைத் தீர்ப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும். மானுட கடனைத் தீர்க்கக் கணபதி வழிபாடு உகந்தது. ருணம் என்ற கடனைத் தீர்க்காதுவிட்டால் நம் மனமும், வாழும் காலமும் ரணமாகிவிடக்கூடும். இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் நலம் தரவல்லது இந்த கணபதி வழிபாடு.

தோரண கணபதி சந்நதிக்கு செவ்வாய், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏதேனும் ஒருநாள் என்று ஆறு வாரங்கள் சென்று கணபதியின் மேகலை முன்பாக மூன்று நெய்தீபங்கள் ஏற்றி முப்பழங்களாக மாதுளை, மா, கொய்யா இவற்றை (தோரண கணபதிக்கு பிடித்த பழங்கள்) வைத்து அறுகம்புல்லைச் சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு தோரண கணபதி மூல மந்திரத்தை 12 முறை சொல்லி தோப்புக்கரணம் செய்து ஆத்ம பிரதட்சிணமும் (தன்னையே சுற்றுதல்) செய்து நமஸ்கரித்தல் வேண்டும்.

‘‘
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் க்லௌம் கம் தோரண கணபதியே சர்வகார்ய கர்த்தாய, சகல சித்திகராய, ஸர்வஜன வசீகரணாய, ருணமோசன ல்லபாய, ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா’’ என்றும், தமிழில் ஒரு விசேடப் பாடலான தோரண கணபதி துதியையும் கூறவேண்டும்:

சக்தியின் மைந்தனாய்ச் சித்திகள் சேர்த்திடும்
முக்தியின் பொருள் சொன்ன மூத்தக் கரிமுகவாய்
காரணணே புகழ்ப்பொருளே கடன்தீர் வீரனே!
தோரண கணபதயே! தோன்றிடுக என் கண்முன்னே!

வாங்கிய கடனை அடைக்க இயலாமல் அவஸ்தைபடுவோரும், கொடுத்த கடனைத் திரும்பப் பெற முடியாமல் அல்லல்படுவோரும் முதலுக்கு மோசம் இன்றி பணம் திரும்ப வந்தால் போதும் என்று நினைப்பவர்களும், இந்த விசேட கணபதிப் பெருமானை வழிபட்டுப் பலன் அடைய முடியும். நமது பூஜையால் மகிழ்ச்சி அடையும் தோரண வாயில் கணபதி தன்னுடைய எழுத்தாணிபோல் உள்ள தந்தத்தால் நம்மை நெருக்குகிற கடன் தீரும்படி தீர்ப்பு எழுதிவிடுவார் என்பது நம்பிக்கை.

சிறிதாகவோ, பெரிதா கடன் உள்ளவர்கள் சுக்கில சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, மற்றும் செவ்வாய்க்கிழமை அன்று காலை, மாலை இருவேளைகளிலும் ருணவிமோசனம் தரும் தோரண கணபதி முன்பாக கூட்டாக யக்ஞம் செய்து வழிபடலாம். ரட்சைகள் செய்தும் கையில் கட்டிக் கொள்ளலாம்.

ருணவிமோசன அக்னி வழிபாடு முறையாக கல்ப விதியின்படி 32 வகையான யாகக் கூட்டுப் பொருட்களால் தோரண கணபதி முன் யக்ஞம் செய்தல் வேண்டும். இதை ஆறு  வாரங்களோ, ஆறு சதுர்த்தி திதியிலோ செய்யவேண்டும்.

ஒரு மனிதனுடைய ஜனன ஜாதகத்தில் ஆறாவது இடம்தான் கடன், நோய், எதிரி  மற்றும் வழக்குகளைப் பற்றிச் சொல்லும் பாவகமாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் ஆறு வாரங்கள் அல்லது சதுர்த்தி திதிகளில் கடன் தீர்க்கும் கணபதிக்கு பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லக் காரணம் குறிப்பிட்ட 6ம் ஸ்தானம் பாவக்கிரஹங்களின் ஆதிக்கத்தில் இருப்பதுதான். ஆறுமுறை வழிபடுவதால் படிப்படியாகக் கடன்சுமை குறைந்து மகிழ்ச்சி அடையலாம்.
பண்டை நாட்களில் அரசர்கள், சத்ரு மற்றும் ருணரோக நிவாரண ரட்சைகளைக் கட்டிக்கொண்டு நலம் பெற்றார்கள்.

அதேபோல சாதாரண மனிதர்களும் எளிய முறையில் ருணரோக நிவாரண ரட்சைகளை செய்து கைகளில் அணிந்து கொள்ளலாம். ரட்சை என்றால் உயிரைக் காப்பது என்று பொருள். இது சாதாரண வண்ணக் கயிறு போன்று இன்று பல இடங்களில் முறையற்ற வகையில்  விற்கப்படுகிறது. 3x3 அளவுள்ள தாமிரத் தகட்டில், பலன் வேண்டி எந்தக் கடவுளை பூஜை செய்கிறோமோ, அந்தக் கடவுளின் பீஜாட்சரத்தை  எழுதி, அதில் 16 முடிச்சுகள், 7 முடிச்சுகள் இட்ட சிவப்பு அல்லது பஞ்சவர்ணக் கயிறை வைத்து பூஜை செய்து ஒரு வட்டமான டப்பாவில் வைத்து பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும்.

பிறகு, வெளியே செல்லும்போது கயிறைக் கையில் கட்டிக்கொண்டு செல்வது முறை.  இப்படியாக ரட்சையைச் செய்து அறுகம்புல், செவ்வரளி, வில்வம் மற்றும் முல்லை மலரால் அர்ச்சனை செய்து வந்தால் எப்படிப்பட்ட பெரும் கடனும் அடைந்து நிம்மதிப் பெருமூச்சு விடலாம். பெருங்கடன் தீர்ந்திட இன்னும் ஒரு ரகசியத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். 'நாள் செய்வதை நல்லோர் செய்யார்' என்பது பழமொழி. நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட 24 மணிநேரங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், கடனில் ஒரு சிறு தொகையைத் தனியே எடுத்து வைத்தால், அதிசயமாகக் கடன் தீர்கிறது.

மைத்ர முகூர்த்தமும் கடன் தீர்தலும் காலம் நமக்கு தோழன், காற்றும் மழையும் நண்பன்,’ என்று ஒரு புலவர் பாடினார். இதன்படி உரிய முகூர்த்த காலங்களைக் கணிதம் செய்து  பயன்படுத்தி வந்தால் எல்லா பேறுகளும் கிடைத்துவிடும். திருமணத்திற்கும், நிச்சயதார்த்தத்திற்கும் லக்கின நிர்ணய முகூர்த்தம்; குடமுழுக்கு மற்றும் பெருஞ்சாந்திகளுக்கு நேத்திர ஜீவனுடன் முகூர்த்தம்; குபேரன், லட்சுமி அருள்பெற வியாழன் அன்று (மாலை 5 - 8) குபேர முகூர்த்தம் என்று அந்தந்த வேளைகளை நாம் பயன்படுத்துகிறோம்.

அதுபோலவே, மனிதனை வாட்டி எடுக்கின்ற கடன் தொல்லையைத் தீர்க்க மைத்ர முகூர்த்தம் கணிக்கப்பட்டுள்ளது. வாங்கிய  கடனில் சிறு தொகையை, கடன் கொடுத்தவர் கணக்கில் போட, விரைவில் கடன் முற்றிலுமாக அடைந்து விடும். தோரண கணபதியை வணங்கி விட்டு இந்த மைத்ர முகூர்த்தத்தைப் பயன்படுத்துங்கள். மூழ்கடிக்கக்கூடிய கடன் வெள்ளத்தையும் வற்றச் செய்யும் மைத்ர வேளையை 6 மாதங்களுக்குக் கணித்தார்கள். வாஸ்து பூஜைக்கு ராகுகாலம், எமகண்டம் ஆகியவை விதி விலக்கு என்ப துபோல இதற்கும் விதிவிலக்கு உள்ளது.

மேஷம்:   வியாழன் காலை 9 - 10½ ;
ரிஷபம்:   வெள்ளி காலை 8 - 10½;
மிதுனம்:   புதன் காலை 7½  - 9;
கடகம்:    திங்கள் மாலை 4½  - 6;
சிம்மம்:    ஞாயிறு காலை 11 - 12½;
கன்னி:    வெள்ளி மாலை 5 - 6½;
துலாம்:    சனி காலை 10½  - 12½;
விருச்சிகம்: வியாழன் மாலை 3 - 5½;
தனுசு:     செவ்வாய் 10½  - 12½;
மகரம்:     சனி காலை 9 - 10½;
கும்பம்:    திங்கள் மாலை 3 - 5½;
மீனம்:     வியாழன் காலை 9 - 10½ வரை.

மைத்ர நேரம் என்பதற்கு நண்பன்போல கடன் அடைய உதவும் நல்ல நேரம் என்று பொருள். பயன்படுத்திப் பலன் பெறலாம். தோரண கணபதிக்கு சதுர்த்தி விழா காஞ்சிபுரம் மாவட்டத்தின் கிழக்கு எல்லையாகவும் தென்சென்னையின் வடக்குப் பாகமாகவும் விளங்கும் செல்வமணி குன்றத்தூர் எனப்படும் தென் குன்றத்தூரில் தெய்வச் சேக்கிழார் பெருமான் அவதரித்த இல்லத்திற்கு எதிரில் உள்ள ஸ்ரீசக்தி கோயிலில் தோரண வாயிலுக்கு எதிரில், ஸ்ரீதோரண கணபதி, தன்னை நாடி வருபவர்களுக்குக் கடன் தொல்லை தீர்ந்திட அருள்பாலிக்கிறார்.

கடன் தொல்லை தீரவேண்டும் என்று வேண்டுவதற்கும், கொடுத்த கடன் திரும்புவதற்கும், பிரதி செவ்வாய்க்கிழமை மற்றும் சதுர்த்தி நாளில் பக்தர்கள் வந்து நெய்தீபம், ஏற்றி விசேட பிரார்த்தனைகள் செய்கின்றனர். விநாயக சதுர்த்தி அன்று காலை 9 மணிமுதல் பகல் 1 மணிவரை சிறப்பு வழிபாடுகள்ஹோமங்களை பக்தகோடிகள் நடத்துகின்றனர். தோரண கணபதியை நாடுங்கள். தீரும் கடன் தொல்லை, பாருங்கள்.

No comments: